அமீரகத்தின் ‘ஹோப்’ விண்கலம் கடந்த 7 மாத பயணத்திற்கு பிறகு நேற்று செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. இதை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
அமீரக அதிபர் ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் வழிகாட்டுதலில் கடந்த 2014- ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமீரகத்தின் செவ்வாய் கிரக பயண திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தப் பயணத்திட்டத்தில் முதல் முறையாக அமீரகத்தில் முற்றிலும் உருவாக்கப்பட்ட ‘ஹோப்’ விண்கலம் ஒன்றை 2021- ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவது இதன் நோக்கமாகும். இந்த விண்கலமானது மனிதர்கள் இல்லாமல் அனுப்ப திட்டமிடப்பட்டது.
அதன்படி விண்கலத்தை உருவாக்கும் பணியானது துபாய் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் விண்வெளி மையத்தின் சார்பில் நடைபெற்றது. இதற்கான முன்தயாரிப்பு பணிகளை அமீரக துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் கடந்த 2016- ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார்.
அந்த விண்கலத்தை 200 அமீரக பொறியாளர்கள், விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள். இந்த ஆண்டில் அமீரகத்தின் 50- ஆவது தேசிய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை கொண்டாடும் வகையில் இந்த செவ்வாய் கிரக பயண திட்டமானது செயல்படுத்தப்பட்டது.
அமீரகத்தின் ‘ஹோப்’ விண்கலம் கடந்து சென்ற மாபெரும் விண்வெளி பயணம் மிக நீண்ட தொலைவானதாகும். பூமியில் இருந்து செவ்வாய் கிரகமானது 6 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். ஆனால் விண்கலம் ஒன்று அதன் சுற்றுவட்டப்பாதையை அடைய வேண்டும் என்றால் 49 கோடியே 35 லட்சம் கி.மீ தொலைவு பயணம் செய்தாக வேண்டும்.
அதற்காக ‘ஹோப்’ விண்கலம் பூமியில் இருந்து மணிக்கு 39 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் வேகத்தில் விண்ணில் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ‘ஹோப்’ விண்கலம் விண்வெளியில் மனிதர்களால் கற்பனை செய்ய முடியாத அளவில் மணிக்கு 1 லட்சத்து 26 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்தது.
பின்னர், செவ்வாய்கிரகத்திற்கு மிக அருகில் சென்றவுடன் அதன் வேகமானது மணிக்கு 18 ஆயிரம் கிலோமீட்டர் வேகமாக குறைக்கப்பட்டது. இதில் பூமியில் இருந்து செவ்வாய்கிரகத்திற்கு இந்த விண்கலம் சென்றடைய 204 நாட்கள் எடுத்துக்கொண்டது.
அமீரகம் மட்டுமல்லாமல் உலகமே எதிர்பார்த்துக் கொண்டு இருந்த இறுதிகட்ட நிமிடங்கள் பலரை நிமிர்ந்து பார்க்க வைத்தது. நேற்று இரவு அந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள டெல்டா 5 என்ற 6 திரஸ்டர் என்ஜின்கள் சுற்றுவட்டப்பாதையை நெருங்கும்போது இயக்கப்பட்டது.
இதனை துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் இயக்கப்பட்டது. இதில் அந்த விண்கலத்தில் உள்ள பாதி எரிபொருள் செலவிடப்பட்டது. மிகச்சரியாக 27 நிமிடங்கள் இயக்கப்பட்டது.
‘ஹோப்’ விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை நேற்று இரவு 7.30 மணியளவில் நெருங்கியது. ஆனால், மிக நீண்ட தொலைவு காரணமானதால் அதனை உறுதிப்படுத்தும் சிக்னல் 12 நிமிடங்கள் தாமதமாக இரவு 7.42 மணிக்கு பூமிக்கு அனுப்பப்பட்டது.
இந்த சிக்னல்கள் ஸ்பெயின் நாட்டி மாட்ரிட் பகுதியில் உள்ள ஆண்டெனா மூலம் பெறப்பட்டது. முதல் சிக்னல் 7.50 மணியளவில் கிடைத்ததும் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் கைதட்டி ஆராவாரம் செய்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.