இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளும், பயங்கரவாதம் இல்லாத சூழலையே விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான உச்சிமாநாடு இன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் காபூலில் ஷாஹூத் அணை கட்டும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இரு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
உச்சிமாநாட்டில், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியுடன் பேசிய இந்திய பிரதமர் மோடி, “இந்தியாவும், ஆப்கானிஸ்தானும், தங்கள் நாட்டுப் பகுதிகள் பயங்கரவாதத்திலிருந்து விடுபட விரும்புகின்றன” என்று கூறினார். ஷாஹூத் அணை, காபூலுக்கு குடிநீர் வசதியை வழங்குவதுடன், நீர்ப்பாசன நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படும் என்றார்.
மேலும் ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்ததோடு, நாட்டில் ஒரு விரிவான போர்நிறுத்தத்தை இந்தியா ஆதரிக்கிறது என்றும் கூறினார்.
இதுதொடர்பாக பேசிய ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, “ஷாஹூத் நீர்த்தேக்கம் மூலம், பாபரின் கற்பனையை கவர்ந்த இயற்கை அழகை மீட்டெடுக்கும் எங்கள் பார்வையை செயல்படுத்த முடியும். தடுப்பூசி மருந்துகளை பரிசாக வழங்கியதுடன், கூடுதலாக இந்த தண்ணீர் பரிசை வழங்கிய இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு நான் நன்றி கூறுகிறேன்” என்று தெரிவித்தார்.