Home உலகம் செனட் சபை குடியரசுக் கட்சித் தலைவர் மீது முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

செனட் சபை குடியரசுக் கட்சித் தலைவர் மீது முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

வாஷிங்டன்:

பதவிநீக்க வாக்கெடுப்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுவிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றக் கலவரத்துக்கு அவர்தான் காரணம் என்று குற்றஞ்சாட்டிய செனட் சபை குடியரசுக் கட்சித் தலைவர் மிட்ஷெல் மெக்கனலை கடுமையாகச் சாடியுள்ளார் டிரம்ப்.

அமெரிக்க நாடாளுமன்றக் கலவரத்தைத் தூண்டியதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக பதவி நீக்க விசாரணை நடைபெற்றது. இதையொட்டி, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பின்போது, அவர் சார்ந்த குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் 7 பேர் எதிராக வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பின் முடிவில், பதவி நீக்க குற்றச்சாட்டிலிருந்து டிரம்ப்பை செனட் சபை விடுவித்தது.

இந்த வாக்கெடுப்பில் டிரம்ப்பை விடுவிக்க, செனட் சபை குடியரசுக் கட்சித் தலைவர் மெக்கனல் உள்ளிட்ட 42 குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஆனால் நாடாளுமன்றக் கலவரத்துக்கு நடைமுறை ரீதியிலும் தார்மீக ரீதியிலும் டிரம்ப்தான் பொறுப்பு என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை; கலவரத்தைத் தூண்டியதன் மூலம் டிரம்ப் தனது கடமையிலிருந்து தவறிவிட்டார் என்று மிட்ஷெல் மெக்கனல் குற்றஞ்சாட்டினார்.

இவர் டிரம்ப்பின் நான்காண்டு பதவிக்காலத்தில் அவருடன் நெருக்கமாகப் பணியாற்றியவர். கட்சியில் அதிகாரமிக்கவர்களாகப் பணியாற்றி வந்த டிரம்ப்பும், மெக்கனலும் அண்மை மாதங்களில் பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் தன் மீது குற்றச்சாட்டு கூறிய மெக்கனலை கடுமைûயாகச் சாடியுள்ளார் டிரம்ப். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மெக்கனல் ஒரு மோசமான அரசியல்வாதி. குடியரசுக் கட்சி செனட் சபை உறுப்பினர்கள் இனிமேலும் அவருடன் சேர்ந்து இருந்தால், அவர்கள் மீண்டும் வெற்றி பெற மாட்டார்கள். நம் நாட்டிற்கு எது சரியானது என்பதை மெக்கனல் ஒருபோதும் செய்ய மாட்டார்.

அதிபர் தேர்தலுக்குப் பின் மெக்கனலுக்கு அரசியல் திறமை மற்றும் ஆளுமைக் குறைபாடு ஏற்பட்டுவிட்டது. குடியரசுக் கட்சி, செனட் பெரும்பான்மையை இழக்க, மெக்கனலின் திறமைக் குறைபாடுகளே காரணம்.

அமெரிக்காவுக்கு நல்லது செய்பவர்களுக்கு, அவர்கள் எதிராளியாக இருந்தாலும் அவர்களுக்கு நான் ஆதரவாக இருப்பேன். அமெரிக்காவுக்கு புத்திசாலித்தனமான, வலுவான, சிந்தனைமிக்க மற்றும் கருணையுள்ள தலைமையையே நாங்கள் விரும்புகிறோம்.

இது நம் நாட்டிற்கு ஒரு பெரிய தருணம். எங்கள் எதிர்காலம் குறித்து உத்தரவிட, மூன்றாம் தர தலைவர்களை பயன்படுத்துவதன் மூலம் அதை கடந்து செல்ல அனுமதிக்க முடியாது என்றார் டிரம்ப்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version