கோலாலம்பூர்;
மிகக் கடுமையான ரத்தநாள (பெருந்தமனி) தடிப்பு பிரச்சினையைக் கொண்டிருக்கும் இருதய நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஒரு புதிய சிகிச்சை முறையை அறிமுகம் செய்வதில் ஐஜேஎன் எனப்படும் தேசிய இருதயக் கழகம் வெற்றிகண்டிருக்கிறது.
இன்ட்ராவஸ்குலர் லிதோட்ரிப்ஸி (ஐவிஎல்) என இந்தப் புதிய சிகிச்சை முறை அழைக்கப்படுகின்றது. ரத்தநாளத்தில் கெட்டியான நிலையிலுள்ள அடைப்பை அகற்றுவதற்கு சோனிக்வேவ்ஸ் எனப்படும் சோனிக் அலைகள் பயன்படுத்தப்படுவது (மின் அதிர்வு அலைகள்) இந்தப் புதிய சிகிச்சை முறையாகும்.
நேற்று முன்தினம் தனது மருத்துவர்கள் இந்தப் புதிய சிகிச்சை முறையைச் செயல்படுத்தியதாக ஐஜேஎன் தன் அறிக்கையில் கூறியது. நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முதல் ஐவிஎல் சிகிச்சை இதுவாகும்.
இந்தப் புதிய சிகிச்சை முறை என்ஜியோ பிளாஸ்டி எனும் சிகிச்சை முறையைவிட பாதுகாப்பானது என்று ஐஜேஎன் மூத்த இருதய சிகிச்சை நிபுணர் டத்தோ டாக்டர் அமின் அரிஃப் நுருடின் கூறினார்.
ரத்தநாளத் தகடு மிகவும் கடினமான அளவுக்குச் சென்றுவிடுமானால் அவர்கள் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியது தவிர்க்க முடியாதது ஆகிவிடும் என்றார் அவர்.
இருதய ரத்தநாளத்தில் சீரான ரத்த ஓட்டம் இருப்பதற்கு ஏதுவாக ரத்தநாளத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்குவதற்கு அறுவைச் சிகிச்சையைோ அல்லது ரத்தநாள அறுவைச் சிகிச்சையைோ செய்தாக வேண்டும் என்றார் அவர்.
என்ஜியோ பிளாஸ்டிபோல ஐவிஎல் சிகிச்சை முறையும் வடிக்குழாயுடன் இணைக்கப்பட்ட பலூனைப் பயன்படுத்துகின்றது. இதில் வித்தியாசம் என்னவெனில், அடைப்பை உடைப்பதற்கு சோனிக் அதிர்வலைகளை இந்தப் பலூன் உற்பத்தி செய்கிறது என்று அவர் விளக்கமளித்தார்.
மிகக் கடுமையான அடைப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுயமாக அழுத்தம் கொடுத்து அடைப்பை உடைப்பது சாத்தியமில்லாத நிலையில் இந்தச் சிகிச்சைமுறை பயன் தரும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்மூலம் ரத்த நாளம் விரிவடைந்து ரத்த ஓட்டம் சீரடையும் என்று அவர் குறிப்பிட்டார்.
கொழுப்பு, கல்சியம் போன்றவை ரத்தநாளங்களில் அடைப்பை ஏற்படுத்துவதால் பெருந்தமனி தடிப்பு உண்டாகிறது.