சிங்கப்பூர்-
சிங்கப்பூரில் ஆகப்பெரிய மிதக்கும் சூரியசக்தித் தகடு அமைக்கப்பட்டுள்ளது. இது, உலகிலேயே ஆகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தித் தகடுகளில் ஒன்று என்று கருதப்படுகிறது.
இந்தச் சூரியசக்தி தகடு ஆண்டுக்கு 4,000 டன் கரிம வெளியேற்றத்தைக் குறைக்க உதவும்.
ஜோகூர் நீரிணையில் உட்லண்ட்சுக்கு அருகே கடல் நீரில் இதனை உருவாக்க ஒரு வருட காலம் பிடித்தது என்று நீடித்த நிலைத்தன்மை எரிசக்தியை வழங்கி வரும் சன்சீப் குழுமம் அறிக்கையில் தெரிவித்தது.
கொவிட்-19 முடக்கப்பட்ட சூழ்நிலையில் இந்தக் கட்டுமானம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது.மொத்தம் 13,312 சூரியசக்தித் தகடுகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. நாற்பது மாறுதிசை மின்னோட்ட சாதனங்கள், 30,000க்கும் மேற்பட்ட மிதவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் அளவு, ஏழு காற்பந்துத் திடல்களுக்கு ஈடானது.ஆண்டுக்கு ஆறு மில்லியன் கிலோவாட் மணிநேர எரிசக்தியை இது உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலப்பற்றாக்குறை நிலவும் சிங்கப்பூரில் இத்தகைய மிதக்கும் சூரிய சக்தித் தகடு வெற்றிகரமாக அமைக்கப்பட்டுள்ளது, எதிர்காலத்தில் சிங்கப்பூரிலும் இவ்வட்டாரத்திலும் இதேபோன்ற பல திட்டங்களை மேற்கொள்ள வழி வகுத்து உள்ளது.