-வடகொரியா அதிரடி
அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி 20- ஆம் தேதி ஜோ பைடன் பதவி ஏற்ற பிறகு, அந்த நாட்டுக்கும், வடகொரியாவுக்கும் இடையே இணக்கமான உறவு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்தது.
அதற்கேற்ப வடகொரியாவை பல்வேறு வழிகள் மூலம் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா அழைத்தது. ஆனால் தங்கள் மீதான விரோத உணர்வை அமெரிக்கா கைவிடாத வரையில், அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என்று வடகொரியா நிராகரித்தது.
இந்த நிலையில், 21- ஆம்தேதி குறுகிய தொலைவுக்கு செல்கிற 2 ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதித்தது. இந்த ஏவுகணைகள் மஞ்சள்கடலில் போய் விழுந்தன. இது நேற்று முன்தினம்தான் தெரிய வந்தது. ஆனால் இதை ஆத்திரமூட்டும் செயலாக பார்க்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.
இந்த நிலையில், வடகொரியா அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்து உள்ளது.
நேற்று, கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை வட கொரியா அடுத்தடுத்து ஏவி சோதித்தது.
இந்த ஏவுகணைகள் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 7.06 மணிக்கும், 7.25 மணிக்கும் வட கொரியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு பகுதியில் இருந்து ஏவப்பட்டதாகவும், அவை 450 கி.மீ. தொலைவுக்கு பறந்து கடலில் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடியவை என்று கருதி, அவற்றை வட கொரியா ஏவிசோதிப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது. அந்த தடையை மீறித்தான் வடகொரியா நேற்று ஒரே நேரத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை ஏவி சோதித்து இருக்கிறது.
இந்த நடவடிக்கை ஆத்திரமூட்டும் செயலாக பார்க்கப்படுகிறது.
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சமீபத்திய தனது பேச்சுக்களில், தனது அணு ஆயுத திட்டங்களை வலுப்படுத்தப்போவதாக சபதம் செய்தார். அமெரிக்காவின் புதிய ஜோ பைடன் நிர்வாகத்துக்கு, அவர்களின் உறவுகளின் தலைவிதி வாஷிங்டனைப் பொறுத்தது என்று கூறினார்.
இந்த ஏவுகணை சோதனைக்கு ஜப்பானும், தென் கொரியாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அதே நேரத்தில் இந்த ஏவுகணைகளின் சிதைவுகள் எதுவும் தங்கள் கடல் பகுதியில் விழவில்லை என்றும் ஜப்பான் கூறியது.
ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா கருத்து தெரிவிக்கையில், “வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை சோதித்து பார்த்து இருப்பது ஜப்பான் மற்றும் இந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவுடனும், தென்கொரியாவுடனும் நெருக்கமாக ஒருங்கிணைப்போம்” என குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் இந்திய பசிபிக் கட்டளை செய்தித்தொடர்பாளர் கேப்டன் மைக் காப்கா கருத்து தெரிவிக்கையில், “வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணை சோதனைகளை நடத்தியதை அமெரிக்க ராணுவம் அறியும். நிலைமையை கண்காணித்து வருகிறோம். நட்பு நாடுகளுடன் நெருக்கமாக ஆலோசித்து வருகிறோம்” என குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், “இந்த நடவடிக்கை வடகொரியாவின் சட்டவிரோத ஆயுத திட்டமானது, அதன் அண்டை நாடுகளுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் ஏற்படுத்தும் அச்சுறுத்தலை எடுத்துக்காட்டுகிறது” எனவும் குறிப்பிட்டார்.
வர உள்ள வாரங்களில் வடகொரியா குறித்த தனது கொள்கையின் மறுஆய்வை நிறைவு செய்வதற்கு முன்பாக அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம், அந்த நாட்டின்மீது என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற கேள்வி சர்வதேச சமூகத்தில் எழுந்துள்ளது.