கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில்
பாதுகாப்பு நடவடிக்கை!
கிள்ளான்-
நாட்டிலேயே மிகப்பெரிய தமிழ்ப்பள்ளியாக விளங்கும் கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் ஏறக்குறைய 1900 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். கொரொனா தொற்றுக் கிறுமி பரவிவரும் இக்காலக்கட்டத்தில், மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு, ஒவ்வொரு வார இறுதியிலும் கிருமி நாசினி வகுப்பறை மற்றும் பள்ளி வளாகம் முழுவதும் தெளிக்கப்பட்டு வருகிறது.
முழுக்க முழுக்க எஸ்ஒபி எனப்படும் நிர்வாக விதிமுறைகள் படி பள்ளி இயங்குவதை உறுதி செய்துகொண்டே இருப்பதாக அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஆர்.கே.சுப்பையா தெரிவித்தார்.
மேலும் பள்ளி வளாகத்தில் வெளியினர் செல்ல அனுமதி இல்லை என்றும் கட்டாயம் இருப்பின் முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர்தான் அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் கூறினார்.
மாணவர்கள் பள்ளிக்கு வரும்போதும் வீடு திரும்பும்போதும் முறையான பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அரசாங்கம் விதித்துள்ள விதிமுறையை எந்தவொரு வெளிப்புற நடவடிக்கைகளிலும் மாணவர்களை ஈடுபடுத்துவது இல்லை.
இக்கட்டான இச்சூழலில் மாணவர்களின் கல்வி ஒருபோதும் தடை ஏற்படா வண்ணம் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தால் இயன்றவரை ஒத்துழைப்பை நல்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் ஒரு சிலர் பள்ளிப் பெற்றோர் மத்தியில் கோவிட் தொற்று பற்றிய வீண் வதந்திகளைப் பரப்புவதனால் சில பெற்றோர்கள், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைப்பதில் தயக்கம் காட்டுகின்றனர். இது மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைக்கு இடையூறை விளைவிக்கின்றது என்றும் இது தொடர்பாகப் பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியும் அவர் கேட்டுக் கொண்டார்.