திருக்குறளை எழுதவைத்து
நூதன தண்டனை!
தண்டனைகளால் திருந்துவது என்பதைவிட அபராதத்தொகை செலுத்தமுடியாமல் பயப்படுகின்றவர்களே அதிகம்! அப்படியானால் திருதுவதற்கு வேறு வழி இருக்கிறதா?
முழு ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் எழுதவைத்த போலீசார் நூதன தண்டனை வழங்கியிருக்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முழு ஊரடங்கு உத்தரவை மீறி வாகன ஓட்டிகள் பலரும் தேவையின்றி வெளியில் சென்று வருகின்றனர்.
இதை தடுக்கவும், கண்காணிக்கவும் மாநகரின் பல்வேறு பகுதி களிலும் போலீசார் சாலைகளில் தடுப்புகளை அமைத்திருக்கிறார்கள். இருப்பினும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறிக்கண்டு வாகன ஓட்டிகள் திரிவது தொடர்கிறது.
போலீசாரிடமிருந்து தப்பிக்க பலரும் சிறிய சந்துகளுக்குள் புகுந்து சென்று வருகிறார்கள். `மாநகரில் தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்’ என, மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் எச்சரித்திருந்தார்.
அதன்படி, வண்ணாரப்பேட்டையில் நேற்று சாலை தடுப்புகள் அமைத்து போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
13 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், வாகன ஓட்டிகளிடம் ஏதாவது 5 திருக்குறளை எழுதும்படி துணை ஆணையர் சீனிவாசன் உத்தரவிட்டார். வாகன ஓட்டிகள் திருக்குறளை எழுதி கொடுத்த பின்னரே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
திருக்குறள் தெரியாதவர்கள், தங்கள் செல்போனில் திருக்குறளை தேடிக் கண்டுபிடித்து மனப்பாடம் செய்து எழுதி கொடுத்தனர்.