பி.ஆர். ஜெயசீலன்-கிள்ளான் (ஜூன் 15) : கிள்ளானில் மூன்றாவது பாலமாக திகழும் ஜம்பாத்தான் ராஜா மூடா பாலத்தில் மெது ஓட்டம், நடைப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகள் மற்றும் பாலத்தின் அருகில் அமர்ந்து கொண்டிருந்தது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய 54 பேருக்கு தலா இரண்டாயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
பொதுமக்கள் கொடுத்த புகாரினைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் குழு ஒன்று, நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை 3.0 காரணத்தால் போக்குவரத்து மூடப்பட்டிருந்த அப்பாலத்தின் அருகில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர்களுக்கு அருகில் வாகனங்களை நிறுத்திவிட்டு, பாலத்தின் உட் பகுதியில் நுழைந்து உடற்பயிற்சிகளை மேற்கொண்டிருப்பதுடன் அமர்ந்து கொண்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக தென்கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி சம்சுல் அமார் ரம்லி தெரிவித்தார்.
அப்பகுதியைச் சேர்ந்த 17 வயதிலிருந்து 40 வயதிற்குட்பட்ட 54 பேரும் தடுத்து வைத்ததுடன் அதிகமானவர் இப்பயிற்சியில் ஈடுபட்டிருந்ததால் உடனடியாக சிலாங்கூர் மாநில காவல்துறையின் நடவடிக்கை குழுவினரும் வரவழைக்கப்பட்டனர்.
மூடப்பட்டிருந்த பாலத்தை பயன்படுத்தியதோடு அத்துமீறி நுழைந்தது போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது கொண்டுவரப்பட்டது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதுடன் அதிகமானோர் ஒரே இடத்தில் கூடியது போன்ற குற்றங்களைஅவர்கள் எதிர்நோக்குகின்றனர். ஒவ்வொருவருக்கும் தலா இரண்டாயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதாக ஏசிபி சம்சுல் அமார் ரம்லி தெரிவித்தார்.