அடுத்தது என்ன?
பரந்த கடலான இணையதளத்தை ஒரு சில சமூக ஊடக நிறுவனங்கள் பிக் டெக் (Big Tech) என்ற போர்வையில் கைப்பற்றியுள்ளன. தனியுரிமை, எந்தவித பொறுப்போ ஒழுங்கு இல்லாமல் இவை மிகவும் லாபகரமாக மாறியுள்ளன. இவைதான் சந்தையை உருவாக்குகின்றன, சந்தையை வளர்கின்றன, சந்தை விதிகளை வடிவமைக்கின்றன.
வரலாற்றில் எந்த ஒரு நிறுவனமும் பொருளாதாரத்தின் மீது இவ்வளவு தன்னிச்சையான அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை. இந்த விபரீத சக்தி பல நாடுகளும், மக்களும் எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய சவாலாகும். ஒரே இடத்தில் செல்வம் இருப்பது சில வகைகளில் பிரச்சினைக்குறியது. கட்டுப்பாடற்ற நிலையில் இது வருமானத்திலும் வாய்ப்பிலும் சமத்துவமின்மையை கொண்டு வருகிறது.
ஆனால் ஒரே இடத்தில் அதிகாரங்கள் குவிந்து இருப்பது அதைவிட ஆபத்தானது. எதை அனுமதிக்க வேண்டும், எதை தவிர்க்க வேண்டும், எது சரி, எது தவறு என்று பலவிதமான லேபிள்கள் ஒட்டப்படுகின்றன. உதாரணமாக, தடுப்பூசிக்கு எதிரான பதிவுகள் ட்விட்டரில் தொற்றுநோய் காலத்தில் அதிக படியாக வலம் வந்தன. ஆனால் அதைவிட குறைவான ஆபத்து உள்ள பல பதிவுகளுக்கு லேபிள்கள் ஒட்டப்பட்டது.
அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டரில் இருந்து தடை செய்யப்பட்டதற்கு ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் குறிப்பிடுகையில், கருத்துக்களை கொண்டிருப்பதற்கான சுதந்திரம் முக்கியமான ஒன்றாகும் என்று தெரிவித்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது. ட்ரம்பின் சமூக ஊடக அக்கவுண்ட் கள் நிரந்தரமாக நீக்கப்பட்டது.
பிரச்சினைக்குறியது என்று கருதப்பட்டது ட்ரம்பின் டிவீட்கள் சரியா,தவறா என்பதல்ல. யார் அவரை தடை செய்வது? எந்த அளவில் வெளிப்படைத்தன்மையுடன் இது நடக்கிறது? என்பதுதான் கேள்வி. டிஜிட்டல் ரீதியாக ஒருவரை ஒருவர் இணைப்பது ஒரு ‘பயன்பாடு’ (utility) என்று கருதும் பொழுது, இவை மதரீதியிலான கலாச்சார மற்றும் கொள்கை ரீதியாக தடை செய்யப்படக் கூடாது. தண்ணீர், மின்சாரம், சாலை வசதிகளை போல சமூக ஊடகங்களும் தங்களுக்கு பிடிக்காதவர்களுக்கும் சேவைகளை வழங்க வேண்டும். தண்ணீர், மின்சாரம், சாலை வசதிகளை ரத்து செய்வதற்கான உரிமை இப்பொழுதும் கூட அரசாங்கத்திடம் தான் உள்ளது. தனியாருக்கு இந்த உரிமை கிடையாது.
அரசாங்கத்திடம் இத்தகைய உரிமைகள் இருந்தாலும் கூட இது தவறாக பயன்படுத்தப் படாமல் இருப்பதற்கு பலவிதமான வழிகள் உள்ளன. சமூக ஊடகங்களுக்கு இவை இல்லை. எப்பொழுதும் தேர்தல்கள் நடந்து கொண்டே இருக்கும் ஒரு நாட்டில் சமூக ஊடகங்களின் இத்தகைய நடவடிக்கைகள் ‘தேர்தல்களில் குறுக்கிடுவது’ (election interference) என்று கூட நாம் கூறலாம்.
ஒரு தேர்தல் வேட்பாளர் மோசமான பேச்சுக்களை பேசினால், அதை தணிக்கை , தடை செய்வதற்கு தேர்தல் ஆணையம், சட்ட அமலாக்க துறை, நீதித் துறைக்கு தான் உரிமை உண்டு. இந்த உரிமைகள் தனியார் நிறுவனத்திற்கு கிடையாது. இது பிக் டெக்கால் மதிக்கப்படுகிறதா?
ஆஸ்திரேலியா இதை உணர்ந்து கொண்டது. பெப்ரவரி மாதத்தில் அது ‘செய்தி ஊடக பேரம் பேசும் சட்டத்தை’ நிறைவேற்றியது. ஃபேஸ்புக் , கூகுள், செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வேண்டும். ஊடக நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகளை நடத்த இந்த சட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியா அரசு ஊக்குவித்தது. ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் சமூக ஊடக நிறுவனங்களுக்கும் இடையில் நீடித்த போருக்குப் பிறகு இவை நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் இதுகுறித்து உறுதியுடன் இருந்தார். கனடாவும் இதற்குப் பின்னர் பிக் டெக்குகளின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்கிறது. ஐரோப்பிய ஒன்றியமும் பிக் டெக் விடுக்கும் சவால்களை குறைக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது. இத்தகைய பிக் டெக் அமைப்புகள், “ஜனநாயகத்தை வழிநடத்த, பாதுகாக்க, குறை மதிப்பிட (undermine) வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
போலந்து இந்த விஷயத்தில் உறுதியாக உள்ளது. கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு எந்த கருத்துக்கள் சரி எந்த கருத்துக்கள் தவறு என்று முடிவெடுக்கும் உரிமை இல்லை என போலந்து பிரதமர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தங்களுடைய சமூக ஊடக கணக்குகள் தடை செய்யப்பட்டால் புகார் அளிக்கலாம் என்றும் 24 மணி நேரத்திற்குள் அவர்களுக்கு தகுந்த விளக்கமளிக்கப்பட வேண்டும். அரசாங்கம் நியமித்துள்ள கவுன்சில் இதுகுறித்த ஆய்வை மேற்கொண்டு தவறாக பதிவுகள் அழிக்கப்பட்டது என்று முடிவெடுக்கப்பட்டால் அவற்றை மீட்டுக் கொண்டுவரும்.
இந்த சட்டங்களுடன் பிக் டெக் ஒத்துழைக்கவில்லை என்றால் 3.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம். இந்த விவகாரத்தில் இந்தியாவும் பல கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.