ஜோகூர் பாரு, ஜூலை 14:
உணவக உரிமையாளர் ஒருவர் தனது நண்பருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பிச் செலுத்துவதை தவிர்ப்பதற்கான 63,000 வெள்ளி கொள்ளை போய்விட்டதாகக் கூறி, பொய் முறைப்பாடு பதிவு செய்த ஆடவரை போலீஸ் கைது செய்துள்ளது.
23 வயதான ஆண் ஒருவர், நேற்று (ஜூலை 13) நண்பகல் 12.15 மணியளவில் தான்னிடம் கொள்ளை நடந்ததாக கூறி ஒரு அறிக்கையை தாக்கல் செய்ததாக ஜோகூர் பாரு வடக்கு OCPD துணைக் கமிஷனர் ரூபியா அப்துல் வாஹிட் தெரிவித்தார்.
மேலும் அவர் தனது அறிக்கையில், “ஜாலான் பஹ்லாவன் 1 ,தாமான் உங்கு துன் ஆமீனாவில் தான் நடந்து கொண்டிருந்தபோது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் தன்னை நெருங்கி வந்ததாகவும் பின்னர் குறித்த சந்தேக நபர்களில் ஒருவர் தனது கழுத்தில் கத்தியைக் காட்டி, அவருக்குச் சொந்தமான ரொக்கம் 63,000 வெள்ளி மற்றும் பல மதிப்புமிக்க பொருட்களை எடுத்துச் சென்றதாக அவர் கூறினார்,” என்று அவர் இன்று (ஜூலை 14) ஓர் அறிக்கையின் வாயிலாக கூறினார்.
ஏ.சி.பி ரூபியா தொடர்ந்து கூறுகையில், தனது நிறுவனத்திற்கு சொந்தமான 63,000 வெள்ளி ரொக்கப் பணத்தையும், கருப்பு நிற லூயிஸ் உய்ட்டன் பிராண்ட் பை உட்பட பல தனிப்பட்ட பொருட்களையும் இழந்ததாகவும் குற்றம் சாட்டினார்.
எவ்வாறாயினும், கொள்ளை சம்பவம் ஒன்றும் நடக்கவில்லை என்பதை குறித்த ஆடவரை விசாரணை செய்ததில் போலீஸ் கண்டுபிடித்தது. அதன் பின்னர் அந்த ஆடவர் தான் ஒரு தவறான அறிக்கையை வழங்கியதற்காக ஒப்புக்கொண்டார்.
“பொய்ப்புகார் கூறிய நபர் தனது நண்பருக்கு 60,000 வெள்ளி தொகையை செலுத்த வேண்டிய இருந்ததாகவும் அப் பணத்தை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியாததால் ஒரு தவறான அறிக்கையை தான் தாக்கல் செய்ததாக “ அவர் கூறினார்.
குறித்த ஆடவர் தற்போது இரண்டு நாட்களுக்கு போலீஸ் விசாரணைக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் அந்த நபர் திருடப்பட்டதாகக் கூறப்பட்ட சில பைகள், ஒரு தங்க மோதிரம், மூன்று ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஒரு மொபைல் போன் உள்ளிட்டவை போலீஸாரால் மீட்க முடிந்தது என்றும் ஏசிபி ரூபியா கூறினார்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 182 ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இது ஒரு குற்றமாக இருப்பதால் பொய்யான போலீஸ் அறிக்கையை பதிவு செய்ய வேண்டாம் என்றும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.