சான்றோர்களுக்குத் தக்க சான்றுகள்
மேதகு பினாங்கு ஆளுநர் துன் அமாட் ஃபூஸி அப்துல் ரசாக் தம்முடைய 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 1,036 பேருக்கு மாநிலத்தின் உயரிய விருதுகளையும் பதக்கங்களையும் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
பட்டியலில் அவர்தம் துணைவியார் தோ புவான் கதிஜா முகமட் நோர், டத்தோஸ்ரீ உத்தாமா என விளங்கும் டர்ஜா உத்தாமா பங்குவான் நெகிரி (டியூபிஎன்) எனும் உயரிய விருதைப் பெறுகிறார்.
அதே சமயத்தில் டர்ஜா செத்தியா பங்குவான் நெகிரி (டிஎஸ்பிஎன்) எனும் டத்தோ விருதை மக்கள் ஓசை இயக்குநர் கோபி என்ற கோபாலகிருஷ்ணன் த/பெ சண்முகமணி பெறுகிறார்.
தமிழ்த்திரு கோபிக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த உயரிய விருது அவரது தமிழ்ச் சேவைக்கும் மக்கள் பணிக்குக் கிடைத்த விருதாகும் என்று பினாங்கு மாநில அரசு சாரா இயக்கங்கள் வாழ்த்தினைப் பதிவு செய்துள்ளன.
டர்ஜா கெமிலாங் பங்குவான் நெகிரி (டிஜிபிஎன்) எனும் டத்தோஸ்ரீ விருதினை 15 பேர் பெறுகின்றனர். அவர்களுள் பினாங்கின் பிரபலமான தொழிலதிபரும் தமிழ்ப்பள்ளிகளுக்குப் பெரும் சேவையாற்றி வருபவருமான டத்தோ புலவேந்திரன் காயாம்பு ஒருவராவார்.
இவர் பினாங்கு மாநில குற்றத்தடுப்பு அறவாரியத்தின் துணைத் தலைவரும் பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியத் தலைவருமாவார்.
டர்ஜா பங்ளிமா பங்குவான் நெகிரி (டிபிபிஎன்) என்ற டத்தோஸ்ரீ விருதினை இருவர் பெறுகின்றனர். மீடியா பிரிமா பெர்ஹாட் குழுமத்தின் தலைவர் டத்தோ டாக்டர் சைடை் ஹுசேன் சைடை் ஜூனிட் , மேபேங் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ முஹாய்னி சம்சுடின் ஆகிய இருவரும் அவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர் என்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பினாங்கு சட்டமன்ற சபாநாயகர் டத்தோ லோ சு கியான் தெரிவித்தார்.
டிஜிபிஎன் எனும் டத்தோஸ்ரீ விருதை பினாங்கு மாநில முன்னாள் போலீஸ் தலைவரும் தற்போது புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் இயக்குநராக இருப்பவருமான போலீஸ் கமிஷனர் டத்தோ சஹாபுடின் அப்துல் மானான் பெறுகிறார்.