Home ஆன்மிகம் வீட்டின் பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்?

வீட்டின் பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்?

கோலாலம்பூர், ஜூலை 30:

மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சந்நிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள்…

ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை அமைக்கலாம்.

பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம். பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளை செம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும்.

ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.

தென்-கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டியது, பூஜை அறையில் நம் முன்னோர்களின் புகைப்படங்களை வைக்கக் கூடாது.

சில வீடுகளில் இடப்பற்றாக்குறை காரணமாக படுக்கை அறை அல்லது சமையல் அறை சுவர்களில் உள்ள அலமாரிகளை பூஜை அறையாக பயன்படுத்துவதுண்டு. அப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் துணித்திரை கொண்டு மூடி வைக்க வேண்டும். சில சமயங்களில் கதவு உள்ள மரப்பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழிபடுவதும் உண்டு. இதை சமையல் அறையின் வட கிழக்கு மூலையில் வைக்கலாம்.

பூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இளமஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும். பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும்.

பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப்புறமாக திறக்கும்படி இருக்க வேண்டும். பூஜை அறையில் மந்திர உச்சாடனங்களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய் விட்டு சொல்லலாம். இது வீட்டில் நேர்மறை எண்ணங்களை கொண்டு வரும்.

அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப்படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது. சிலர் கடமைக்காக அவசர அவசரமாக விளக்கை ஏற்றி, கையை எடுத்து கூம்பிட்டு சென்று விடுவர். இறைவனை பிரார்த்திக்கும் போது நேரம் ஒதுக்கி வழிபடுவது நல்லது.

இறைவனை வழிபட்டு இவ்வுலக வாழ்வில் இன்பம் பெற்று வாழ்வோம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version