ஒரு கிலோ எலிக்கறி 200 ரூபாய்!’ –
நைஜீரியாவில் புல்வெட்டி எலி (Nigerian Grasscutter) என்றொரு வகை எலி உண்டு. மிகவும் லாபகரமான தொழிலாக இந்த வகை எலி வளர்ப்பு நைஜீரிய விவசாயிகளால் பார்க்கப்படுகிறது.
நைஜீரிய மக்களிடையே நாடு முழுக்க, இந்த வகை எலியின் மாமிசம் விரும்பி உண்ணப்படுகிறது. ஆகவே, இதற்கான சந்தையும் அங்கு நன்றாகவே வளர்ச்சியடைந்துள்ளது.
நன்கு வளர்ச்சியடைந்த ஓர் எலி, 3,500 நைஜீரிய நைரா (நைஜீரிய நாணயம்) முதல் 5,000 நைஜீரிய நைரா வரை, அதாவது இந்திய ரூபாய் மதிப்பில், 633 ரூபாய் முதல் 902 ரூபாய் வரை விற்பனையாகிறது.
ஒரு நைஜீரிய புல்வெட்டி எலி, பிறந்து 6 மாதங்களிலேயே நன்கு வளர்ந்து, இனப்பெருக்கத்திற்குத் தயாராகிவிடும். அவை அந்த வயதில், ஒரு முறைக்கு 10 குட்டிகள் வரை ஈனுகின்றன. விரைந்து வளரக்கூடியதாகவும் அதிக குட்டிகளை ஈனக்கூடியதாகவும் நைஜீரிய மக்களின் உணவுப் பழக்கத்தில் விருப்பத்துக்கு உரியதாகவும் இருப்பதால், அது நைஜீரிய கால்நடை விவசாயிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆக்ஸ்ஃபோர்ட் பிசினஸ் குரூப் வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி, முழுதாக வளர்ந்த ஒரு பெண் எலி கர்ப்பம் தரித்து ஐந்து மாதங்களில் குட்டி போடுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை கர்ப்பம் தரிக்கும் இவை, ஒருமுறைக்கு குறைந்தபட்சம் 6 முதல் அதிகபட்சமாக 10 குட்டிகள் வரை ஈனுகின்றன.
அதாவது ஓராண்டில், ஒரு பெண் புல்வெட்டி எலியால், 12 முதல் 20 குட்டிகள் வரை உற்பத்தி செய்ய முடியும். அப்படிப் பிறக்கும் அவை, பிறந்து 6 மாதங்களிலேயே, குட்டி ஒன்று இந்திய மதிப்பில் 900 ரூபாய் வரைக்கும் விற்பனையாகின்றன.
நம் மக்களிடையே எலிக் கறி என்றாலே, ஒருவித முகச் சுளிப்பைக் காண முடியும். எலி மாமிசத்தைச் சாப்பிடுவதா என்ற அருவருப்பு மனநிலைதான் நம்மில் பலருக்கும் இருக்கும்.
தமிழ்நாடு மட்டுமன்றி பீகார் போன்ற வடமாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களிலும் இது நடைமுறையில் உள்ளது. நைஜீரியாவில் எப்படி புல்வெட்டி எலிக் கறி பெருவாரியான மக்களால் விரும்பி உண்ணப்படுகிறதோ, அதேபோல் இந்தியாவிலும் ஆங்காங்கே எலிக் கறி விற்பனை நடந்து வருகிறது.