பாகோஹ்: முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கான SOP தளர்வுகள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என்று பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்துள்ளார்.
முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் ஆவலுடன் காத்திருக்கும் அறிவிப்பாக இது இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
“நானும் எனது இரண்டு டோஸ்களை முடித்துவிட்டேன், ஆனால் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களைப் பார்ப்பதற்கு, மாநிலங்களுக்கு இடையேயான அல்லது மாவட்டங்களுக்கு இடையேயான பயணம் போன்ற கட்டுப்பாடுகளை தளர்த்தும் அறிவிப்புக்களை நாங்கள் இன்னும் அறிவிக்கவில்லை” என்றார்.
“குடும்பங்கள் ஒன்றாக இரவு உணவை உட்கொள்ள அனுமதிப்பது போன்ற மக்கள் விரும்பும் பிற சமூக அம்சங்களை உள்ளடக்கியே SOP யில் தளர்வுகளை நாங்கள் முடிவு செய்யவுள்ளோம்” என்றும் கூறினார்.
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 5) ஃபெல்டா பத்து 27 லெங்காவில் உதவி வழங்கும் மற்றும் நடமாடும் தடுப்பூசி திட்டத்தை பார்வையிட்ட பிறகு, “அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன், உணவகங்கள் அல்லது உணவு நிலையங்கள் தேவையான தயாரிப்புகளைச் செய்யலாம்” என்றும் அவர் கூறினார்.
மேலும் பயணம் மற்றும் சாப்பாடு தவிர,முழுமையான தடுப்பூசியின் அளவுகளை பெற்றுக் கொண்டவர்களுக்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் SOP யில் மக்கள் விளையாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிப்பது பேன்றவையும் அடங்கும் என்று முஹிடின் கூறினார்.
“மக்கள் டென்னிஸ், பேட்மிண்டன், கோல்ஃப் விளையாடலாம் அல்லது ஜிம்மிற்கு செல்லலாம், ஆனால் இது இன்னும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலால் (NSC) பரிசீலிக்கப்படுகிறது,” என்றும் அவர் கூறினார்.
தளர்வு இருந்தாலும், கோவிட் -19 க்கு எதிராக பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை முஹிடின் நினைவுபடுத்தினார்.
“சிலர் இன்னும் முழுமையாக தடுப்பூசி போடாததால் நாடு இன்னும் முழுமையான நோய் எதிர்ப்பு சக்தியை அடையவில்லை,” என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.