திங்களன்று பதவியை ராஜினாமா செய்த முஹிடின் யாசினுக்குப் பிறகு நாட்டின் ஒன்பதாவது பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்மாயில் சப்ரி யாகோப்பை முஹிடின் துணைப் பிரதமராக ஜூலை 7 அன்று நியமித்தார். அவர் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தார்.
மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவின் சிறப்பு அதிகாரி அஹமத் ஃபாடில் ஷம்சுதீன் இன்று ஒரு அறிக்கையில் அறிவித்தார். நாளை பிற்பகல் 2.30 மணிக்கு அம்னோ துணைத் தலைவர் பிரதமராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்மாயில் முன்பு பாரிசன் நேஷனல் ஆட்சியின் போது பல்வேறு அமைச்சகங்களில் பணியாற்றினார்.
2008 ஆம் ஆண்டில், அவர் அப்துல்லா அஹ்மட் படாவியின் கீழ் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஒரு வருடம் கழித்து, நஜிப் ரசாக்கின் அரசாங்கத்தின் கீழ் அவர் உள்நாட்டு வர்த்தகம், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2013 ஆம் ஆண்டில், அவருக்கு விவசாயம் மற்றும் வேளாண் சார்ந்த தொழில் துறை வழங்கப்பட்டது. பின்னர் 2015 இல் கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.