புக்கிட் மெர்தாஜம்: குபாங் செமாங்கின் புக்கிட் மென்குவாங்கில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில், வெளிநாட்டினர் என்று நம்பப்படும் இரண்டு குற்றவாளிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
இன்று அதிகாலை 5.50 மணியளவில் நடந்த சம்பவத்தில், 30 மற்றும் 40 வயதிற்குட்பட்ட இருவரும், இங்குள்ள ஜாலான் பெனாண்டியில் போலீஸ் சோதனையிலிருந்து புரோட்டான் வாஜா ரக காரில் வேகமாகச் சென்றனர்.
கார்களை சோதனைக்காக நிறுத்துமாறு அவர்களுக்கு போலீசார் உத்தரவிட்டனர்.
குறித்த ஆடவர்கள் தங்கள் காரை ஓர் குன்றின் அருகே ஒரு புதர் பகுதியில் நிறுத்தி விட்டு, காரின் முன்னாலிருந்த ஆடவர் வெளியில் வந்து போலீசாரை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டார். அதே நேரத்தில் காரை ஓட்டிய ஆடவர் பாராங் கத்தியை கொண்டு போலீசாரை தாக்கினார்.
“சந்தேக நபர்களின் ஆக்ரோஷமான இச் செயல்களைத் தொடர்ந்து, போலீஸ் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் துப்பாக்கிச்சூட்டில் அவ்விரு சந்தேக நபர்களும் கொல்லப்பட்டனர்” என்று மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் ஷுஹைலி முகமட் ஜெயின் இன்று கூறினார்.
மொஹமட் ஷுஹைலி தொடர்ந்து கூறுகையில், இந்த சம்பவத்தில் போலீஸ் யாரும் காயமடையவில்லை என்றும் கூறினார்.
இருப்பினும், துப்பாக்கிச்சூடு போலீஸ் வாகனத்தின் பக்க கண்ணாடியை தாக்கியது என்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 12) புக்கிட் மெர்தாஜத்தில் நடந்த குற்றவியல் மிரட்டல் மற்றும் துப்பாக்கிச் சூடு வழக்கைத் தொடர்ந்து இரண்டு சந்தேக நபர்களும் Ops Api Siakap மூலம் போலீஸ் தேடப்படும் பட்டியலில் இருந்தனர் என்றும் கூறினார்.
மேலும் சந்தேக நபர்களின் காருக்குள் சோதனை செய்ததைத் தொடர்ந்து, ஹெரோயின் மற்றும் வீடு உடைப்புக்கான உபகரணங்களை போலீசார் கண்டுபிடித்தனர்.
“ஆறு தோட்டாக்கள் ஏற்றப்பட்ட கைத்துப்பாக்கியையும் ஒரு பாராங் கத்தியையும் போலீசார் கண்டுபிடித்தனர்,” என்று அவர் மேலும் கூறினார்.
அத்தொடு, சந்தேக நபர்கள் ஓட்டிய கார் ஆகஸ்ட் 29 அன்று காணாமல் போனது என்றும் சுங்கை பட்டாணி, கெடாவில் இது தொடர்பான வழக்கு பதிவுசெய்யப்பட்ட சோதனையில் தெரியவந்தது என்றார்.
இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக செபராங் ஜெயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
குற்றவியல் சட்டம் பிரிவு 307 ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.