கோலாலம்பூர்: கிளந்தான், குவா மூசாங் அருகே உள்ள பாலோ செம்பனைத் தோட்டத்தில் நேற்றிரவு நடந்த ஒரு சம்பவத்தில் மின்னல் தாக்கியதில் 19 மாடுகள் இறந்தன. இதனால் அம்மாடுகளை வளர்த்து வரும் விவசாயிக்கு கிட்டத்தட்ட 100,000 வெள்ளி இழப்பு ஏற்பட்டது.
விவசாயியான முஹமட் ஷாருலாபிஸாம் ஜோஹாரி (31) இது பற்றிக் கூறுகையில் , இரவு 10 மணியளவில் அப்பகுதியில் பலத்த மின்னலுடன் மழை பெய்தபோது, இந்த சம்பவம் நடந்ததாக கூறினார்.
செம்பனைத் தோட்டப் பகுதியில் விடுவிக்கப்பட்ட 49 மாடுகளை அவர் வளர்த்து வந்தாகவும் ஆனால் மீதி 30 இந்த சம்பவத்தில் இருந்து உயிர் தப்பின என்றும் கூறினார்.
மழையின் போது செம்பனை மரங்களுக்குப் பின்னால் 19 மாடுகளும் தஞ்சம் புகுந்தபோது, மின்னல் தாக்கி இருக்கலாம் என்று நம்பப்படுவதாக கூறினார்.
“இன்று காலை 7.30 மணியளவில் மாடுகளை ஆய்வு செய்ய நான் பண்ணைக்குள் நுழைந்த போதே சம்பவத்தை நான் அறிந்தேன்.
“கால்நடைகளின் சடலங்கள் ஒன்றுக்கொன்று பக்கங்களில் இறந்து கிடப்பதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன்” என்றார்.
ஏழு வருடங்களாக நான் கால்நடைகளை வளர்த்து வருகிறேன் ஆனால் இவ்வாறு ஒரு சம்பவம் நடைபெற்றது இதுவே முதல் முறை என்று ஷாருலாபிஸாம் கூறினார்.
மேலும் அவர் வழக்கமாக தினமும் மாலையில் இரண்டு மணி நேரம் பண்ணைக்கு சென்று கால்நடைகள் பண்ணையை விட்டு வெளியேறுவதை தடுக்க தனது கால்நடைகளை கண்காணிப்பதாவும் கூறினார்.
“உண்மையில், நான் நேற்று மாலை 7 மணிக்கு வீடு திரும்பும் முன், அனைத்து 49 பசுக்களும் சம்பந்தப்பட்ட செம்பனைத் தோட்டத்தில் நல்ல நிலையில் இருந்தன,” என்றும் அவர் கூறினார்.
மாடுகளின் சடலத்தை அடக்கம் செய்வதற்கு முன் இன்று நண்பகல் 12.24 மணியளவில் பாலோ காவல் நிலையத்தில் ஷாருலாபிஸாம் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-எஃப். எம். டி