ஹைதியின் தலைநகர் போர்ட் அவ் பிரின்சில் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரீபியன் தீவு நாடான ஹைதி உலகிலேயே அதிக அளவு கடத்தல் சம்பவங்கள் நடக்கும் நாடாக இருந்து வருகிறது. எனினும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளின் பலனாக கடந்த சில ஆண்டுகளாக அங்கு கடத்தல் சம்பவங்கள் குறைந்திருந்தன.
இந்த சூழலில் அண்மையில் அந்த நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட பின்னர் கடத்தல் கும்பல்களின் கை மீண்டும் ஓங்கியுள்ளது.
இந்த நிலையில், ஹைதியின் தலைநகர் போர்ட் அவ் பிரின்சில் உள்ள தேவாலயத்தில் பணியாற்றி வரும் அமெரிக்கர்களே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர்.
தேவாலய ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினரோடு அருகில் உள்ள ஒரு அனாதை ஆசிரமத்துக்கு சென்றுவிட்டு பஸ்சில் திரும்பி கொண்டிருந்தபோது, அவர்களை வழிமறித்த மர்ம கும்பல் சிறுவர்கள் உள்பட 17 பேரை கடத்தி சென்றது.
இந்நிலையில் அந்த கடத்தல்காரர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? கடத்தப்பட்டவர்களின் தற்போதைய நிலை என்ன? போன்ற எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
இதேவேளை குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பாக ஹைதி அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாக போர்ட் அவ் பிரின்சில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.