கோலாலம்பூர், அக்டோபர் 29:
காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த ஆடவர், கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இன்று காலை 8.30 மணியளவில் கோம்பாக்கின் சுங்கை துவா – உலு யாம் சாலையோரத்தில் உடல் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் சாய்னால் முஹமட் தெரிவித்தார்.
ஆரம்ப கட்ட விசாரணையின் அடிப்படையில், குறித்த ஆடவர் கொலை செய்யப்பட்டிருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், கடந்த 26 ஆம் தேதி பாதிக்கப்பட்டவரான விநாயகம் த/பெ ஜெகநாதன், 32, என்ற ஆடவர் பெராடுவா மைவி வகை ஊதா வர்ணக் காருடன் காணாமல் போனதாகவும் அவர் மஸ்ஜிட் இந்தியா, கோலாலம்பூர் பகுதியில் இறுதியாக காணப்பட்டதாகவும் போலீசில் புகாரளிக்கப்பட்டிருந்தது.
மேலும் இச் சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.