கோலாலம்பூர், அக்டோபர் 31:
நேற்றுவரையுள்ள தரவுகளின் அடிப்படையில், நாட்டிலுள்ள பெரியவர்கள் மொத்தம் 24,411,588 பேர் அல்லது 95.5 விழுக்காட்டினர் கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் முடித்துவிட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெரியவர்களில் 97.7 விழுக்காட்டினர் அல்லது 25,479,010 பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றிருப்பதாக அமைச்சகம் தனது கோவிட்நவ் (CovidNow) போர்ட்டலில் தெரிவித்தது.
நேற்றைய தினம் 75,874 டோஸ்கள் வழங்கப்பட்டதாகவும், அதில் 20,370 பூஸ்டர் தடுப்பூசியாகவும் 6,312 தடுப்பூசிகள் முதல் டோஸாகவும் 49,192 தடுப்பூசிகள் இரண்டாவது டோஸாகவும் பயன்படுத்தப்பட்டது. தேசிய கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் (PICK) கீழ் நிர்வகிக்கப்படும் மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கையை 50,012,681 ஆகக் கொண்டு வந்ததாகவும் அது கூறியுள்ளது.
மேலும் இதுவரை நாட்டிலுள்ள பெரியவர்கள் மொத்தம் 1,052,823 பேர் அல்லது 4.5 விழுக்காட்டினர் கோவிட் -19 தடுப்பூசியை செலுத்தவில்லை என்றும் அது தெரிவித்தது.
12 முதல் 17 வயது வரையிலான பதின்ம வயதினர் 2,063,107 பேர் அல்லது 65.5 விழுக்காட்டினர் கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் போட்டுக்கொண்டுள்ளனர். அதே நேரத்தில் 83.0 விழுக்காட்டினர் அல்லது 2,612,639 பேர் குறைந்தபட்சம் முதல் டோஸைப் பெற்றுள்ளனர்.
மேலும் இதுவரை பதின்ம வயதினர் மொத்தம் 549,532 பேர் அல்லது 17.0 விழுக்காட்டினர் தடுப்பூசியை செலுத்தவில்லை என்றும் அது தெரிவித்துள்ளது.