சிலிம் ரிவர், நவம்பர் 14 :
இங்குள்ள லாடாங் செரிகலா பிரிவு A அருகே உள்ள பாமாயில் தோட்டத்தில் நேற்று வெடிக்காத இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
முஅல்லிம் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் இதுபற்றிக் கூறுகையில், நேற்று மாலை 4 மணியளவில் இதுதொடர்பில் ஒருவரால் புகார் அளிக்கப்பட்டது.
“புகார் அளிக்கப்பட்டவுடன், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.
“பிரதான சாலையில் இருந்து கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தொலைவில், அறுவடை செய்யப்பட்ட செம்பனம்பழங்கள் எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் பாதையின் ஓரத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது,” என்று அவர் கூறினார்.
மேலும் இந்த வெடிகுண்டு 73 செமீ நீளம், 50 செமீ சுற்றளவு கொண்ட ஷெல் 155 மிமீ பீரங்கிக்கு பயன்படுத்தப்படுவது என்று சுலிஸ்மி கூறினார்.
அந்த ஷெல், சாலையோரத்தில் உள்ள ஒரு கரையில் புதைக்கப்பட்ட நிலையில், அதன் நுனி மட்டும் வெளிப்பட்ட நிலையில் காணப்பட்டதாக அவர் கூறினார்.
“பேராக் காவல்துறை தலைமையகத்தில் இருந்து வெடிகுண்டு செயலிழப்பு பிரிவின் குழு இன்று காலை வெடிகுண்டை செயலிழப்பு செய்ய சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது ,” என்று அவர் கூறினார்.