கோலாலம்பூர், நவம்பர் 19 :
பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளை மேற்பார்வையின்றி வாகனத்தில் தனியாக விட்டுச் செல்வதன் மூலம், அலட்சியமாக இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு RM50,000 அபராதம் அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று PDRM தெரிவித்துள்ளது.
ரோயல் மலேசியன் போலீஸ் (PDRM) , குறிப்பாக பெற்றோருக்கு நினைவூட்டலாக இந்த எச்சரிக்கையை வெளியிட்டது, ஏனெனில் இந்தச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் எந்த சமரசமும் இல்லாமல் தண்டிக்கப்படுவார்கள்.
“எந்த மன்னிப்பும் இல்லை. எந்த சமரசமும் இல்லை. உங்கள் அலட்சியத்திற்கு பலன் கிடைக்கும். ஒரு தனிநபரின் அலட்சியமாக குழந்தையை வாகனத்தில் விட்டுச் செல்வது, குழந்தைகள் சட்டம் 2001 பிரிவு 31 (1) (a) இன் கீழ் குற்றமாகும்,” என்று PDRM தனது முகநூலில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.
PDRMஇன் படி, குற்றம் நிருபிக்கப்பட்டால் அவர்களுக்கு RM50,000க்கு மிகாமல் அபராதம் அல்லது 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி நெகிரி செம்பிலானின் சிரம்பானில் நடந்த சமீபத்திய சம்பவத்தை தொடர்ந்து, வாகனத்தில் விடப்பட்டதன் விளைவாக குழந்தைகள் இறந்த பல சம்பவங்களை ஊடகங்கள் செய்தியில் வெளியிட்டிருந்தன.
இச்சம்பவத்தில், பண்டார் ஸ்ரீ சேந்தயன், தாமான் நுசாரி பாயு 2 இல், எட்டு வயது சிறுமி ஒருவர் பள்ளி வேனில் சுமார் மூன்று மணி நேரம் விடப்பட்ட நிலையில் இறந்தார்.
மேலும் ஏப்ரல் 28 அன்று, ஜோகூர் பாருவில் உள்ள சுங்கை திராம், உலு திராம் என்ற இடத்தில் மூன்று வயதுச் சிறுமியை அவரது பாட்டி ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக காரில் விட்டுவிட்டு சென்றதால், சிறுமி இறந்து கிடந்தார்.
இதற்கிடையில், மார்ச் 16 அன்று, கெடாவின் சுங்கைப்பட்டாணியில் உள்ள தாமான் ரியாவில் மழலையர் பள்ளி முதல்வர் ஓட்டிச் சென்ற காரில், மூன்று வயது சிறுவன் நான்கு மணி நேரம் விடப்பட்ட பின்னர் வெப்பத் தாக்குதலால் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காதிருக்க வேண்டுமாயின், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் பொறுப்புடன் இருக்கவேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த முகநூல் அறிவிப்பினூடாக போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.