கோலாலம்பூர்: மலேசிய இந்திய சமூக மாற்றப் பிரிவு (மித்ரா) நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் பத்து நிறுவனங்கள் மீது விரைவில் குற்றஞ்சாட்டப்படும் என்று மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்ஏசிசி) கூறுகிறது. 10 நிறுவனங்களின் விசாரணை கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக அது கூறியது.
அவர்கள் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நாங்கள் துணை அரசு வழக்கறிஞரிடம் பரிந்துரைப்போம். மீதமுள்ளவர்கள் மீது விசாரணை இன்னும் தொடர்கிறது என்று திங்கள்கிழமை (நவம்பர் 22) Muzium Negara MRT நிலையத்தில் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை நடத்திய எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி கூறினார்.
மானியங்களை வழங்குவதற்கு பயன்படுத்தப்படும் அமைப்புகள் மற்றும் நடைமுறைகளையும் நாங்கள் பார்த்து வருகிறோம். அதில் பல ஓட்டைகள் இருந்தன என்பது எங்கள் கருத்து. இது நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு பகுதி என்று அவர் மேலும் கூறினார். மித்ரா மானியம் பெற்ற நிறுவனங்கள் சமர்ப்பித்த அனைத்து அறிக்கைகளும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றார்.
ஒவ்வொன்றாகச் சரிபார்க்க வேண்டும். உதாரணமாக, ஒரு நிறுவனத்திற்கு மாடுகளை வாங்க மானியம் வழங்கினால், அந்த மாடுகள் உண்மையில் வாங்கப்பட்டதா? எங்கே கொள்முதல் செய்யப்பட்டது போன்றவற்றைச் சரிபார்க்க வேண்டும். அது ஒரு நிறுவனம் மட்டுமே. விசாரணைகள் தொடர்கின்றன என்றார்.
2019 முதல் இன்றுவரை மித்ரா ஒதுக்கீடுகளைப் பெற்றவர்களால் செயல்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் அனைத்து விண்ணப்பங்கள், செலவு அறிக்கைகள் மற்றும் திட்டங்களை MACC மதிப்பாய்வு செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. மித்ரா நிதியை முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பல நிறுவன இயக்குநர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்தது