அலோர் ஸ்டார், நவம்பர் 24 :
கெடாவில் வெள்ளத்தால் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று நண்பகல் 12 குடும்பங்களைச் சேர்ந்த 58 பேராக இருந்த நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி 25 குடும்பங்களைச் சேர்ந்த 92 பேராக அதிகரித்துள்ளது.
மலேசிய குடிமைத் தற்காப்பு இயக்கத்தின் (APM) கெடா பேரிடர் மேலாண்மைக் குழு செயலகத் தலைவர் முஹமட் முவாஸ் முகமட் யூசோப் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்கள் குபாங் பாசு மற்றும் கோத்தா ஸ்டார் மாவட்டங்களில் உள்ள மூன்று வெள்ள நிவாரண மையங்களில் (PPS) தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் உள்ள “SK Gunungஇல் ஒரு PPS நேற்று இரவு 10 மணிக்கு திறக்கப்பட்டது, இதில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
குபாங் பாசு மாவட்டத்தில், நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் திவான் கம்போங் லஹார் பிபிஎஸ்ஸில் தஞ்சம் அடைந்துள்ளனர்,மேலும் 7 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர் திவான் கம்போங் டிராடிசி லெம்பா கெரியாங் பிபிஎஸ்ஸில் தங்கியுள்ளனர் என்று முஹமட் முவாஸ் கூறினார்.
குபாங் பாசு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கம்போங் லஹார், கம்போங் பாயா டோக் கியோங் மற்றும் கம்போங் நாங் மஹ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று அவர் கூறினார்.
– பெர்னாமா