கோலாலம்பூர், டிசம்பர் 21 :
ஜாலான் பாத்தாங் காலி – செலாயாங், உலு யாம் சாலையோரம் சனிக்கிழமையன்று கண்டெடுக்கப்பட்ட சடலத்தில் சந்தேகத்திற்கிடமான காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர் என்று கோம்பாக் காவல்துறைத் தலைவர் ஏசிபி ஜைனல் முகமட் கூறுனார்.
இந்த வழக்கினை கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் போலீஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
“உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை, ஆனால் பிரேத பரிசோதனையில் இரு கண்களிலும் நெற்றியிலும் வீக்கம் காணப்பட்டது,” என்று அவர் கூறினார்.
காணாமல் போன குடும்ப உறுப்பினர்களின் குடும்பங்கள் அல்லது உறவினர்கள் அல்லது வழக்கு பற்றிய தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி ஏஎஸ்பி ஆர். குழந்தைவேலுவை 019-2579232 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவலாம் என்று ஜைனல் முஹமட் கூறினார்.
கடந்த டிசம்பர் 18 அன்று, உலு யாம் சாலையோரம் இளஞ்சிவப்பு போர்வை மற்றும் வெள்ளை துணியால் மூடப்பட்ட ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.