கோலாலம்பூர், டிசம்பர் 26 :
பகாங் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்களது எண்ணிக்கை குறைந்து வருகிறது, இருப்பினும் இன்று நண்பகல் நிலவரப்படி , 5,576 குடும்பங்களைச் சேர்ந்த 18,447 பேர் அங்குள்ள 131 வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
நேற்று இரவு, இந்த நிவாரண மையங்களில் தங்கியிருந்தவர்கள் எண்ணிக்கை (21,726 பேர்) இன்று குறைவடைந்துள்ளது .
மெந்தகாப்பின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் தொடர்ந்து குறைந்து வருவதால், தெமெர்லோவில் உள்ள 40 நிவாரண மையங்களில் 2,670 குடும்பங்களைச் சேர்ந்த 9,165 பேரும், பெந்தாங்கின் 18 நிவாரண மையங்களில் 1,334 குடும்பங்களைச் சேர்ந்த 3,705 பேரும் தங்கியுள்ளனர்.
பெராவில் 19 நிவாரண மையங்களில் 591 குடும்பங்களைச் சேர்ந்த 2,096 பேரும், பெக்கானில் 23 நிவாரண மையங்களில் 580 குடும்பங்களைச் சேர்ந்த 1,802 பேரும், மாரான் 28 மையங்களில் 423 குடும்பங்களைச் சேர்ந்த 1,466 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மாநில குடிமைத் தற்காப்புப் படை (APM) செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நம்பிக்கைக்குரியவாறு வானிலை தொடர்ந்தால், குவந்தானில் உள்ள மூன்று நிவாரண மையங்களும் அடுத்த 48 மணி நேரத்தில் கட்டம் கட்டமாக மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.