குயிட்டோ, பிப்ரவரி 2 :
ஈக்வடார் தலைநகர் குயிட்டோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 24 பேர் உயிரிழந்தாகவும் மேலும் 12 பேரை காணவில்லை என்று மேயர் சாண்டியாகோ கார்டெராஸ் கூறியுள்ளார், மோசமான வெள்ளத்தைத் தொடர்ந்து வீடுகள் மற்றும் தெருக்கள் சேற்றால் மூடப்பட்டுள்ளன.
மேலும் ஈக்வடாரில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் சாலைகள் பாதிப்படைந்துள்ளன. திங்கட்கிழமை இரவு பெய்த பலத்த மழையினால் லா காஸ்கா மற்றும் லா கொமுனா ஆகிய பகுதிகளுக்கு அருகே உள்ள பள்ளத்தாக்கில் தண்ணீர் தேங்கி, மண் மற்றும் பாறைகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து மின்சார வசதியை பாதித்துள்ளது.
அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைப்பு கூறுகையில் 48 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் நிலச்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது, மேயர் அலுவலகம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தங்குமிடங்களை அமைத்து நகரின் தெருக்களை சுத்தம் செய்யத் தொடங்கியுள்ளது”. என தெரிவித்துள்ளது.
நேற்று குயிட்டோவில் பெய்த மழை, கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு சதுர மீட்டருக்கு 75 லிட்டருக்கு சமமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.