புது டெல்லி, பிப்ரவரி 15 :
சீனாவின் பியூட்டி கேமரா உட்பட்ட 54 செயலிகளை தடை செய்ய மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மற்றும் சீன படையினர் இடையில் லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் 15-ம் திகதி நள்ளிரவு மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்த மோதலை தொடர்ந்து கடந்த 2020 ஜூன் 29-ம் திகதி டிக்டாக் உள்பட 58 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது.
அதன்பின்னரும் மேலும் பல சீன செயலிகளுக்கு மத்திய அரசாங்கம் தடை விதித்தது.
இந்தநிலையில் பியூட்டி கேமரா, ஸ்வீட் கேமரா ஹெச்டி, பியூட்டி மேகரா செல்பி, பேஸ் பூஸ்டர், ஒப் லாக்கர், டுயல் ஸ்பேஸ் லைட் உட்பட்டமேலும் 54 சீன செயலிகளுக்கு தடை விதிக்க இந்திய மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறியே குறித்த 54 சீன செயலிகளையும் தடை செய்ய மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை இந்திய அரசு விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து இந்தியாவில் தடைசெய்யப்படும் சீன செயலிகளின் எண்ணிக்கை 200-க்கும் மேலாக அதிகரித்துள்ளது.