கோலாலம்பூர், பிப்ரவரி 22 :
இங்குள்ள ஜாலான் யு-தாண்டில் உள்ள சொகுசுமாடிக் குடியிருப்பில், இணைய மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் 7 சீனர்கள் உட்பட 9 பேரை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை 4.30 மணியளவில் நடந்த சோதனையில், வாங்சா மாஜூ வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவின் (BSJK) குழு, 22 முதல் 42 வயதுக்குட்பட்ட 7ஆண்களையும் 2 பெண்களையும் கைது செய்தது.
கோலாலம்பூர் வணிக குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJK), துணை ஆணையர் மஹிதிஷாம் இஷாக் இதுபற்றிக் கூறுகையில், இணைய மோசடி நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கணினிகள், 15 மொபைல் போன்கள், ஒரு ரூட்டர் மற்றும் மோடம் ஆகியவற்றையம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
“இது தொடர்பான மேலதிக விசாரணையில், இந்த நடவடிக்கை முழுமையாக செயல்படவில்லை, அதற்கு பதிலாக சந்தேக நபர்கள் மோசடி செய்வதற்கு தொடர்புடைய உபகரணங்களை ஒன்றுசேர்ப்பது மற்றும் பதிவேற்றம் (compiling and installing) செய்துவந்தது கண்டறியப்பட்டது.
மேலும் போலீஸ் விசாரணையின் மூலமாக, யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் கண்டறியப்பட்டது. சந்தேக நபர்கள் வெளிநாட்டில் இருப்பவர்களை குறிவைத்ததாக நாங்கள் நம்புகிறோம்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களிடம் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லை என இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவரைப் பொறுத்தவரை, அனைத்து சந்தேக நபர்களும் மோசடி செய்ததற்காக குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ் விசாரணையில் உதவுவதற்காக, வரும் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர் என்றார்.