ஷா ஆலாம், பிப்ரவரி 24 :
போர்ட் கிள்ளான் அருகே ஜாலான் பெசார் பண்டமாரான் உள்ள மாநகர சபைக்கு (MPK) சொந்தமான 15 வரிசை உணவுக் கடைகள் இன்று அதிகாலை தீயில் எரிந்து நாசமானது.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் நோராஸாம் காமிஸ் கூறுகையில், இந்த தீ விபத்தில் சுமார் 80 சதவீத கடைகள் அழிந்துவிட்டன, ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றார்.
அதிகாலை 3.14 மணிக்கு தீ விபத்து குறித்து தமது துறைக்கு தகவல் கிடைத்ததாகவும், போர்ட் கிள்ளான் மற்றும் ஸ்ரீ அண்டாலாஸ் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 15 தீயணைப்பு வீரர்கள் சுமார் எட்டு நிமிடங்களுக்குப் பிறகு அந்த இடத்திற்கு வந்ததாகவும் அவர் கூறினார்.
“தீயணைப்பு வீரர்கள் 15 நிமிடங்களில் தீயை கட்டுப்படுத்தினர். காலை 5.18 மணியளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது,” என்று அவர் கூறினார். மேலும் தீ விபத்துக்கான காரணம் ஆராயப்படுகிறது என்றார்.