கோலாலம்பூர், மார்ச் 17 :
Touch N Go (TnG) கார்டுகளுக்கு மீள்நிரப்பல் (Top -Up) நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோதமாக ரிவார்டு பாயிண்ட் கார்ட் மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேரை போலீசார் நேற்று, செராஸில் உள்ள சொகுசு மாடிக்குடியிருப்பில் நடத்திய சோதனையில் கைது செய்தனர்.
கோலாலம்பூர் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJK) தலைவர், துணை ஆணையர் முகமட் மகிதிஷாம் இஷாக் கூறுகையில், மாலை 4 மணியளவில் அந்த இடத்தைச் சோதனை செய்ததாகக் கூறினார்.
“இந்தச் சோதனையில், 30 முதல் 46 வயதுடைய இரண்டு வெளிநாட்டுப் பெண்கள் உட்பட இரண்டு உள்ளூர் ஆண்களையும் ஒரு உள்ளூர் பெண்ணையும் நாங்கள் தடுத்து வைத்தோம்.
மேலும் அவர்களிடமிருந்து “ஒரு மடிக்கணினி, எட்டு மொபைல் போன்கள், 1,400 TnGo கார்டுகள், 5,200 ரிவார்டு பாயிண்ட் கார்டுகள், 35 ரிவார்டு கார்டு ரசீதுகள், 3 காசோலை புத்தகங்கள் மற்றும் ஒரு கார்டு டேட்டா ரீடர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தோம்,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இந்தக் கும்பல் மார்ச் 2021 முதல் செயல்பட்டு வருவதாகவும், டாப்-அப் செய்யப்பட்ட கார்டுகள் சட்ட விரோதமாக கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள சந்தைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதும், ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக முகமட் மஹிதிஷாம் கூறினார்.
“இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட ஒரு TnG நிறுவனத்திடமிருந்து, RM12,500 மதிப்புள்ள 22 கார்டுகளை மீள்நிரப்ப முடிந்தது என்பது புரிகிறது.
“அங்கீகரிக்கப்படாத அணுகலைச் செய்ததற்காக 1997 ஆம் ஆண்டு கணினி குற்றச் சட்டம் பிரிவு 4 (1) இன் கீழ் மேலதிக விசாரணைக்காக அனைத்து சந்தேக நபர்களும் இன்று தொடங்கி மார்ச் 19 வரை மூன்று நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.
TnG கார்டு அல்லது ரிவார்டு பாயிண்ட் கார்டுகளில் எந்தவொரு சட்டவிரோத மீள்நிரப்பல் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்று அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
“குற்றச் செயல்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், கோலாலம்பூர் காவல்துறையின் ஹாட்லைனை 03-2146 0584/0585 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது CCIDயின் பதில் மையத்தை 03-26101559/1599 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் “அவர்கள் Whatsapp CCID இன்ஃபோலைன் மூலம் 013-2111 222, semakmule.rmp.gov.my அல்லது அருகிலுள்ள எந்த காவல் நிலையத்திற்கும் தகவல் அனுப்பலாம்,” என்று அவர் கூறினார்.