மலாக்கா, மார்ச் 26 :
ஜாலான் குருபோங்-தம்போய் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சறுக்கி, விழுந்ததில் வாலிபர் ஒருவர் சாலைத் தடுப்புக்கும் மரத்துக்கும் இடையே உடல் சிக்கியதால், பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்று காலை 9.50 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், உடல் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், ஃபிர்தௌஸ் ஷா ஜைனல் (18) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மாநில போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர், கண்காணிப்பாளர் ஹாசான் பஸ்ரி யாஹ்யா கூறுகையில், காலை 10.35 மணிக்கு மோடெனாஸ் கிரிஸ் வகை மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதாக தமது துறைக்கு அறிக்கை கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து, ஜாலான் குருபோங் செல்லும் திசையில் இருந்து பாதிக்கப்பட்டவர் ஜாலான் பெரிண்டஸ்ட்ரியான் குருபோங்-தம்போய் நோக்கிச் சென்றதாகவும், சாலையின் இடதுபுறத்தில் உள்ள இரும்புத் தடுப்பில் மோதியதற்கு முன்பு, அவர் ஒட்டிய மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
“பாதிக்கப்பட்டவர் தூக்கி எறியப்பட்டு, அவரது உடல் சாலையோரத்தில் இருந்த ஒரு இரும்பு தடுப்புக்கும் மரத்திற்கும் இடையில் சிக்கிக் கொண்டது என்று விசாரணையில் கண்டறியப்பட்டது.
“விபத்து நடந்த இடத்தில் விசாரணை அதிகாரியின் ஆய்வின் அடிப்படையில் , சம்பவம் நடந்த நேரத்தில் வானிலை நன்றாக இருந்தது என்றும் வாகனத்தை ஓட்டுநர் கட்டுப்படுத்தத் தவறியதால் விபத்து நடந்ததாக நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41 (1)ன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
“இன்று கோவிட் -19 சோதனையின் முடிவுகளைப் பெற்ற பிறகு பிரேதப் பரிசோதனை நாளை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“பாதிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிளும் கணினிமயமாக்கப்பட்ட வாகன ஆய்வு மையத்திற்கு (புஸ்பகம்) ஆய்வுக்காக அனுப்பப்படுவதற்கு முன்பு, காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், உயிரிழந்தவரின் குடும்பத்தின் கவுரவத்தைப் பாதுகாக்கும் வகையில், உடல் நிலையைக் காட்டும் வீடியோக்களைப் பரப்ப வேண்டாம் என்று ஹாசான் பஸ்ரி பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.