லாஹாட் டத்தோ, ஏப்ரல் 7 :
நேற்று, ஜாலான் ஜெரோகோ – லஹாட் டத்தோவில், பொது நடவடிக்கைப் படையின் 17 வது பட்டாலியன் உறுப்பினர்கள் மேற்கொண்ட நடவடிக்கையில், RM85,848 மதிப்புள்ள சிகரெட்டுகளை கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட, சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
35 மற்றும் 37 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களும், 17 PGA பட்டாலியன் பணிக்குழுவின் உறுப்பினர்களால் காலை 7 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.
சபா PGA படைப்பிரிவின் கமாண்டர், மூத்த துணை ஆணையர் அப்துல் ராணி அலியாஸ் கூறுகையில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கிடமான நிலையில் அவர்கள் ஓட்டி வந்த லோரியை அவரது உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தினர்.
லோரியின் பின்புறம் சோதனை செய்ததில் 36 கருப்பு பிளாஸ்டிக் மற்றும் இரண்டு பிரவுன் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.
“மேலும் சோதனையில் RM85,848 மதிப்புடைய மொத்தம் 820 கார்டன்கள் வரி இல்லாத சிகரெட்டுகளை கண்டுபிடித்தனர்.
“அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் மற்றும் லோரியின் மொத்த மதிப்பு RM235,848 ” என்று அவர் கூறினார்.
அப்துல் ராணி தொடர்ந்து கூறுகையில், விசாரணையின் முடிவுகளில், சம்பந்தப்பட்ட இரு சகோதரர்களும் கோத்தா கினாபாலுவில் இருந்து தவாவுக்கு கடத்தப்பட்ட சிகரெட்டுகளை அனுப்புவதற்கு கூலி வாங்கியது கண்டறியப்பட்டது.
“இந்த வழக்கு சுங்கச் சட்டம் 1967 இன் பிரிவு 135 (1) (d) இன் படி விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.