தைப்பிங், ஏப்ரல் 12 :
வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில், வடக்கு நோக்கிய சாலையின் 220 ஆவது கிலோமீட்டரில், இன்று காலை, கான்கிரீட் கம்பங்களை ஏற்றி வந்த டிரெய்லர் சறுக்கி, விபத்துக்குள்ளானதில் டிரெய்லர் ஓட்டுநர் உயிரிழந்தார்.
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேராக் மாநில செய்தித் தொடர்பாளர் இதுபற்றிக் கூறுகையில், இன்று காலை 4.43 மணிக்கு சம்பவம் குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும், தைப்பிங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் கூறினார்.
அவர் கூறியபடி, சம்பவ இடத்திற்கு வந்தவுடன், கான்கிரீட் கம்பங்கள் ஏற்றப்பட்ட டிரெய்லர் லோரி சாலையின் கரையில் விபத்துக்குள்ளாகிக் கிடந்ததைக் கண்டனர், மேலும் ஓட்டுநர் அவர் ஏற்றிவந்த கான்கிரீட் கம்பங்களுக்குள் சிக்கிக்கொண்டதைக் கண்டனர் என்றார்.
“33 வயதான ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) உறுதிப்படுத்தியது, அத்தோடு கான்கிரீட் கம்பத்தை தூக்கி அகற்றும் நடவடிக்கைக்காக கிரேன் இயந்திரங்களைப் பயன்படுத்தி மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார்.
“கம்பத்தை அகற்றிய பின்னர், தீயணைப்புப் பிரிவினர் சுமார் 8 நிமிடங்களில் பாதிக்கப்பட்டவரை அகற்றி, மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைத்தனர்” என்று, இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் அவர் தெரிவித்தார்.