கோலாலம்பூர், மே 1 :
மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இருநாடுகளின் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், காதல் மோசடிச் செயல்களை மேற்கொண்டதாக நம்பப்படும் இரண்டு கும்பல்களை கைது செய்துள்ளனர்.
இது, இருநாட்டுக் காவல்துறையினரும் இவ்வாண்டு இணைந்து வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள முதல் முறியடிப்பு நடவடிக்கையாகும்.
இணையம்வழி மேற்கொள்ளப்பட்ட காதல் மோசடிச் செயல்களால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக இரு பெண்கள் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிங்கப்பூர் காவல்துறை நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
46 வயதுடைய அவ்விரு பெண்களும் இக்காதல் மோசடியில் சிக்கியுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் 15,000 வெள்ளியை இழந்தார். மற்றொருவர் 20,000 வெள்ளியையும் இழந்துள்ளனர்.
ஏமாற்றுக்காரர்களைப் பிடிக்க சிங்கப்பூர் காவல்துறையின் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு, மலேசியாவின் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவுடன் இணைந்து செயல்பட்டது. காதல் மோசடிச் செயல்களை மேற்கொண்ட ஏமாற்றுக்காரர்கள் குழு மலேசியாவில் இயங்கியது தெரியவந்தது.
சென்ற மாதம் 22, 23ஆம் தேதிகளில் சிலாங்கூர், கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் இருக்கும் இரண்டு அடுக்குமாடி வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆறு ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கைதானோர் 28லிருந்து 40 வயதுக்கு உள்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.