ஜெனீவா, மே 21 :
உலகின் 11 நாடுகளில் குரங்கம்மை தாக்கம் ஏற்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
அதன்படி, குரங்கம்மை தொற்று மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாகக் காணப்படும் வைரஸ் மூலம் பரவும் நோய். இது பெரியம்மை போன்ற அரிய தொற்றுநோய். ஆனால் பெரியம்மையைவிட அதன் தாக்கம் சற்று குறைவு.
குரங்கம்மையை ஏற்படுத்தும் வைரஸ் தோலின் மேற்புறத்தில் உள்ள உடைந்த உயிரிகள் மூலமாகவும், சுவாசக் குழாய் மூலமாகவும் பரவ வாய்ப்புள்ளது.
இதன் அறிகுறிகளாக காய்ச்சல், தோலில் அரிப்பு மற்றும் நிணநீர் கணுக்களில் வீக்கம் ஆகியவை காணப்படும். இதுதவிர மருத்துவ சிக்கலான நிலைக்கும் கொண்டு செல்ல கூடும். இதன் பாதிப்பு 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும் என தெரிவித்து உள்ளது.
கண், காது, மூக்கு உள்ளிட்ட பகுதிகள் உள்ள மியூகோஸ் திசுக்கள் மூலமாக பரவக்கூடும். எனவே இது தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அது அறிவுறுத்தியுள்ளது.
இதுவரை 80 பேருக்கு இந்த நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 50 பேரின் முடிவுகள் இன்னும் வரவில்லை. கண்காணிப்பு பணிகளை விரிவுபடுத்தும்போது, இந்த பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்க கூடும் என்று அது மேலும் தெரிவித்துள்ளது.