கூலாய், மே 23 :
மே 15 அன்று இங்குள்ள தாமான் சைன்டெக்ஸ் சேனாயில் நடந்த ஒரு சம்பவத்தில், மற்றொரு நபரின் வீட்டின் முன்னால் இருந்த அலங்கார விநாயகர் சிலையை வீசியதாக குற்றஞ்சாடடப்பட்ட ஆடவர், குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, அந்த உணவக உதவியாளருக்கு RM2,500 அபராதம் விதிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட கேப்ரியல் ஜங்காக் அனாக் ஸ்டீவர்டு என்ற அந்த ஆடவர் அபராதத்தை செலுத்தத் தவறினால், அவருக்கு மூன்று மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், நீதிபதி ஷரிபா மலீஹா சையத் ஹுசின் முன்னிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதி இந்த தண்டனையை வழங்கினார்.
குற்றச்சாட்டின் அடிப்படையில், 23 வயதுடைய நபர், நீரூற்றுடன் இணைக்கப்பட்டிருந்த நிலையிலிருந்த அலங்கார விநாயகர் சிலையை சேதப்படுத்தி, பின் இழுத்துச் சென்று குப்பைத் தொட்டியில் வீசினார்.
இந்தச் செயலைத் தொடர்ந்து, அவர் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 427 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது, இது ஒரு வருடத்திற்கு குறையாத மற்றும் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
கேப்ரியல் ஜங்காக் தனது மேல் முறையீட்டில், அந்தப் பகுதி வழியாகச் செல்லும் போது தனக்கு இடையூறு ஏற்படுத்தியதால் சிலையை தூக்கி எறிந்ததாகக் கூறினார்.
தண்டனை வழங்கப்படுவதற்கு முன்பு, நீதிபதி ஷரிபா மலீஹா குற்றம் சாட்டப்பட்டவரை, ஒரு சமூகத்தில் வாழ கற்றுக்கொள்ளவும், மற்ற நபர்களின் உடமைகளை மதிக்கவும் அறிவுறுத்தினார்.
இந்த வழக்கை துணை அரசு வழக்கறிஞர் எட்லின் வோங் கையாண்டார். குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் எந்த வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.
மே 19 அன்று, கூலாய் மாவட்ட காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் டோக் பெங் இயோவ், இந்தச் சம்பவம் தொடர்பான 42 வினாடிகள் கொண்ட காணொளி முகநூலில் பரவியதை அடுத்து, ஒரு இந்து சமய பிரார்த்தனை சிலையை குப்பைத் தொட்டியில் வீசிய சந்தேக நபரை போலீசார் தேடி வருவதாகக் கூறப்பட்டது.
காலை 9 மணியளவில் முறைப்பாட்டாளரின் வீட்டிற்கு முன்னால் இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படும் அதே நாளில், மாலை 4.30 மணியளவில் இந்த சம்பவத்தை பதிவுசெய்தது தொடர்பாக ஒருவரிடமிருந்து போலீசாருக்கு புகாரும் கிடைத்தது.
விநாயகப் பெருமானின் பூஜை சிலை வீட்டின் முற்றத்திற்கு வெளியே அலங்கார நோக்கங்களுக்காக வைக்கப்பட்டது என்றும் பூஜை நோக்கங்களுக்காக அல்ல என்றும் புகார்தாரர் உறுதிப்படுத்தினார்.