பெட்டாலிங் ஜெயா, ஜூன் 15 :
சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா, சிலாங்கூர் மாநில பாஸ் கட்சி தலைவர் டத்தோ டாக்டர் அஹ்மட் யூனுஸ் ஹைரியை இஸ்தானா புக்கிட் காயங்கானுக்கு வருமாறு அழைத்து, சந்திப்பொன்றை நடத்தினார் என்று இன்று புதன்கிழமை (ஜூன் 15) வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாக சிலாங்கூர் அரச அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் அவர்களது சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விஷயங்கள் தொடர்பில் எதுவும் பகிரப்படவில்லை, ஆனால் சிலாங்கூர் அரசாங்கம் Bon Odori ஜப்பானிய திருவிழாவில் முஸ்லிம்கள் பங்கேற்பதைத் தடை செய்ய வேண்டும் என்று அஹ்மட் யூனுஸ் விடுத்த அழைப்பைத் தொடர்ந்தே இக் கூட்டம் நடந்துள்ளது என அறியமுடிகிறது.
அடுத்த மாதம் நடைபெறும் ஜப்பானிய Bon Odori விழாவை நடத்துவதற்கு எந்த வகையிலும் தடையாக இருக்க வேண்டாம் என்று சிலாங்கூர் இஸ்லாமிய மதத் துறைக்கு (Jais) சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்தினார்.
ஆனால் அதற்கு மாறாக, மத விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதமரின் துறை அமைச்சர் டத்தோ இட்ரிஸ் அஹ்மட், இந்த நிகழ்வில் இருந்து விலகி இருக்குமாறு இஸ்லாமியர்களைக் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஜூலை 16 ஆம் தேதி ஷா ஆலாம் விளையாட்டு வளாகத்தில் நடைபெறவிருக்கும் இவ்விழா, ஜப்பானிய சமூகம் மற்றும் வணிகர்களுக்கு உள்ளூர் மக்களுடன் நல்லெண்ணத்தை வளர்ப்பதற்காக பல தசாப்தங்களாக இங்கு நடைபெற்றுவரும் ஒரு சமூக நிகழ்வாக நடத்தப்படுகிறது.
ஜூன் 9 அன்று சிலாங்கூர் அரச அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், 2016 ஆம் ஆண்டு மலேசியாவுக்கான அப்போதைய ஜப்பானிய தூதருடன் சுல்தான் ஷராஃபுதினும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார் என்றும், அவரது கண்காணிப்பு மூலம் Bon Odori கொண்டாட்டங்களில் எந்த மதக் கூறுகள் அல்லது சடங்குகளோ இல்லை என்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.