பட்டர்வொர்த், ஜூன் 28 :
பந்தாய் பெர்சி அருகே உள்ள பாகன் அஜாம் மீனவர் ஜெட்டியில், நேற்று நண்பகல் கடலில் மூழ்கி உயிரிழந்த 11 வயது சிறுவனின் உடல், இன்று காலை 9.15 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது.
இங்குள்ள பந்தாய் பெர்சி கடற்கரைப் பகுதியிலிருந்து வெகு தொலைவில், வலையில் சிக்கி நிலையில் உயிரிழந்த முகமட் மைக்கேல் முக்மின் அப்துல்லாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
பட்டர்வொர்த் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நீர் மீட்புக் குழுவின் மூத்த தீயணைப்பு அதிகாரி II, முகமட் இஷாருதீன் இஸ்மாயில் கூறுகையில், சிறுவனின் உடல் தடயவியல் நோக்கங்களுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்றார்.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில், பாதிக்கப்பட்ட சிறுவன் தனது மூன்று நண்பர்களுடன் அப்பகுதியில் குளிக்கும்போது காணாமல் போனதாக நம்பப்படுகிறது.