மிரி, ஜூன் 30 :
கடந்த ஜூன் 21 அன்று மிரி மருத்துவமனையில் ஒரு ஆண் ஆசிரியர் இறந்தது குறித்து, போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
38 வயதான அந்த ஆசிரியரின் மரணம் தொடர்பில், ஜூன் 22 மாலை காவல்துறைக்கு கிடைத்த புகாரைத் தொடர்ந்து, தாம் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக மிரி மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் அலெக்சன் நாகா சாபு தெரிவித்தார்.
“இந்த சம்பவம் தொடர்பான எந்தவொரு தகவலும் உள்ள நபர்கள் விசாரணைக்கு உதவ முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ் வழக்கை ஊகிக்க வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக பணி அழுத்தம் மற்றும் மனச் சோர்வு காரணமாக ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.
இந்த குற்றச்சாட்டினால் இறந்தவரின் குடும்பத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, மிரி மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளிட்ட பல அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.