பாலிங், ஜூலை 5 :
நேற்று திங்கள்கிழமை (ஜூலை 4) இங்குள்ள கம்போங் இபோய், குபாங்கில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, வலுவான நீரோட்டத்தில் அவர்களின் வீடு இழுத்துச் சென்றதால், நான்கு மாத கர்ப்பிணி உட்பட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை காணவில்லை.
காணாமல் போனவர்கள் சல்மா மாட் அகிப், 53, அவரது கர்ப்பிணி மருமகள் நூருல் ஹனிஸ் அபு ஹாசன், 23, மற்றும் மகன் முகமட் கைருல் இக்வான் நோர் அஸ்மான், 14 என்ற மூவருமாவர்.
சல்மாவின் கணவர், 71 வயதான அப்தூள் ரஹ்மான் சைட் கூறுகையில், அவர்கள் காணாமல் போவதற்கு முன்னதாக நூருல் ஹனிஸிடம் இருந்து வெள்ள நீர் பெருகுவது குறித்து தெரிவிக்க தமக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக கூறினார்.
”வெள்ள நீர் வருவது குறித்து மாலை 4 மணியளவில் மருமகள் கூறினார், நான் அப்போரது வீட்டில் இல்லை, ஆனால் நான் வீட்டிற்கு வந்தபோது, அங்கு எமது வீடு இல்லை, பாலமும் அடித்துச் செல்லப்பட்டது,” என்று அவர் இன்று SMK ஜெராயில் உள்ள வெள்ள நிவாரண மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.
மேலும் வெள்ளம் அப்பகுதியை மிகவும் மோசமாக பாதித்தது என்றார்.
நூருல் ஹனிஸின் கணவர், கைருல் அஷ்ரப் நோர் அஸ்மான், 24 கூறுகையில்; அவர் பினாங்கில் வேலை செய்துகொண்டு இருப்பதாகவும், சம்பவம் குறித்து அவரது சகோதரியால் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக வீட்டிற்கு விரைந்ததாகவும் கூறினார்.
“அவளை மகப்பேறு பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல நான் இன்று வீட்டிற்கு வர திட்டமிட்டிருந்தேன்,” என்று அவர் கூறினார், அவரது மனைவி அவர்களின் முதல் குழந்தையுடன் கர்ப்பமாக உள்ளார்.
இதற்கிடையில், நேற்று இங்குள்ள கம்போங் இபோயில் ஏற்பட்ட வெள்ளச் சம்பவத்தில், 14 முதல் 53 வயதுக்குட்பட்ட மூன்று குடும்ப உறுப்பினர்கள் காணாமல் போனதாக, பாலிங் மாவட்ட காவல்துறைத் தலைவர், ஷம்சுதின் மாமட் உறுதிப்படுத்தினார்.
போலீசார் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர், ஆனால் இன்று அதிகாலை 2 மணி வரை அவர்கள் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
“இடம் இருட்டாக இருந்ததால் நடவடிக்கையை தொடர முடியவில்லை,” என்று அவர் கூறினார், இன்று காலை 7 மணிக்கு தேடுதல் மற்றும் மீட்பு பணி மீண்டும் தொடங்கியது என்றார்.