ஜார்ஜ்டவுன், ஜூலை 12 :
பாலிங் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினைத் தொடர்ந்து, சுங்கை துவா நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இங்குள்ள ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷாவில் நீர்க்குழாய் வெடித்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் புதன்கிழமை முதல் மாநிலம் முழுவதும் உள்ள நுகர்வோருக்கான நீர் விநியோகம் தடைபட்டிருந்தது. இந்த நீர்க்குழாய் வெடிப்பு நேற்று முழுமையாக சீர்செய்யப்பட்டதால் நீர் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளது.
பினாங்கு நீர் வழங்கல் கழகத்தின் (PBAPP) அறிக்கையின்படி, நேற்று இரவு சுமார் 11 மணியளவில் நீர் விநியோகம் முழுமையாக சீரமைக்கப்பட்டது.
மேலும் “மாநிலத்தில் நீர் விநியோகத்தை மீட்டெடுப்பதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவிய அனைவருக்கும் பினாங்கு நீர் வழங்கல் கழகம் நன்றி தெரிவிக்க விரும்புகிறது. இந்த காலகட்டத்தில் ஏற்பட்ட சிரமத்திற்கும் அனைத்து நீர் பயனர்களிடமும் PBAPP மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது, ”என்று அது இன்று வெளியியுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.