கோத்தா பாரு, ஜூலை 30 :
கெடா பாலிங்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தொடர்பான முழு அறிக்கை, ஆகஸ்ட் 4 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக எரிசக்தி மற்றும் இயற்கை வளங்கள் (KeTSA) அமைச்சர் டத்தோஸ்ரீ தாகியுடின் ஹாசன் கூறினார்.
வெள்ளச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை அமைச்சகம் தொகுக்க வேண்டியிருப்பதால், அறிக்கை தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது என்றார்.
இன்று நடைபெற்ற 55வது கோத்தா பாரு பாஸ் கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
மூசாங் கிங் திட்டத்தை நிறுத்துமாறு அரசு சாரா நிறுவனங்கள் அழைப்பு விடுத்தது உள்ளிட்ட கேள்விக்கு, கோத்தா பாரு எம்.பி.யாக இருக்கும் தகியுடின், அது கெடா அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றார்.
“மூசாங் கிங் திட்டம் மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது,” என்று அவர் கூறினார்.
ஜூலை 4ஆம் தேதி ஏற்பட்ட பாலிங் வெள்ளத்தில், மொத்தம் 41 பகுதிகள் பாதிக்கப்பட்டன. வெள்ளத்தில் 23 வயது கர்ப்பிணி உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.