கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 :
பென்காலா சுங்கச்சாவடி அருகே வேகமாக சென்ற காரை போலீசார் துரத்திச் சென்று தடுத்து நிறுத்தியதில், இரண்டு மனித கடத்தல்காரர்கள் மற்றும் நாட்டிற்குள் கடத்தப்பட்ட 9 வெளிநாட்டினர் பிடிபட்டனர்.
நேற்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 20) காலை 11.20 மணியளவில் சந்தேக நபர்களை காரில் போலீசார் கண்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட் காவல்துறை தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபக்ருதீன் அப்துல் ஹமீத் தெரிவித்தார்.
“காலாவதியான மோட்டார் உரிமத்தை கண்டுபிடித்த போலீசாரின் ரோந்துக்குழு, ஓட்டுநரை நிறுத்துமாறு அறிவுறுத்தியது. இருப்பினும், ஓட்டுநர் வேகமாக காரை ஓட்டினார், அதனைத் தொடர்ந்து, ஜாலான் SS2/67 வரை அந்தக் காரை போலீசார் துரத்துவதற்கு வழிவகுத்தது.
“சந்தேக நபரின் வாகனம் பொதுமக்களுக்கு சொந்தமான இரண்டு வாகனங்களை மோதிய பின்னர் நிறுத்தப்பட்டது. அப்போது ஓட்டுநர் மற்றும் பயணிகள் தப்பிக்க முயன்றனர், ஆனாலும் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.
22 முதல் 43 வயதுக்குட்பட்ட ஒன்பது வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்துள்ளதாக வாகன சோதனையில் தெரியவந்துள்ளது.
அனைவரிடமும் அடையாள ஆவணங்கள் இல்லை என்றும், டாமன்சாரா பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு அனுப்புவதற்காக அழைத்து வரப்பட்டனர் என்றும் அவர் மேலும் கூறினார்.
மேலும் அந்த ஒன்பது வெளிநாட்டவர்களால் ஆங்கிலம் அல்லது மலாய் மொழியில் உரையாட முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
36 மற்றும் 31 வயதுடைய உள்ளூர் சந்தேகநபர்கள் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டவர்கள் குடிவரவு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.