ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 31 :
மாநிலம் முழுவதுமுள்ள பொழுதுபோக்கு மையங்களில் மேற்கொண்ட “Ops Ambang Merdeka” எனப் பெயரிடப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது, பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் உட்பட 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 30) காலை 8 மணி முதல் புதன்கிழமை (ஆகஸ்ட் 31) காலை 8 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் 23 முதல் 52 வயதுக்குட்பட்டவர்கள் என்று ஜோகூர் காவல்துறைத் தலைவர், ஆணையர் டத்தோ கமாருல் ஜமான் மாமட் தெரிவித்தார்.
“நாங்கள் 19 பொழுதுபோக்கு மையங்கள் உட்பட 31 வளாகங்களில் ஆய்வுகளை நடத்தினோம், மேலும் அங்கிருந்த 539 ஆண்கள் மற்றும் 140 பெண்களிடம் சோதனை நடத்தினோம்.
“அதிலிருந்து, போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக 21 ஆண்கள் மற்றும் நான்கு பெண்களை நாங்கள் கைது செய்தோம்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், அவ்வளாகங்களிலிருந்து ரசீதுகள், மடிக்கணினிகள், மைக்ரோபோன்கள், ஸ்பீக்கர்கள், டிவி, மானிட்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறினார்.