புத்ராஜெயா, செப்டம்பர் 15:
நாடு முழுவதும் உள்ள 500 வெள்ள எச்சரிக்கை சமிக்ஞைகளில், சுமார் 300 எச்சரிக்கை சமிக்ஞைகளை உள்ளூர் மக்களுக்கு மிகவும் திறம்பட வழங்குவதற்காக மேம்படுத்தப்பட்டு வருவதாக நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (DID) இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் முகமட் நசீர் முகமட் நோ கூறினார்.
இந்த எச்சரிக்கை சமிக்ஞைகள் போலீஸ் அல்லது ஆம்புலன்ஸ் சைரன்களில் இருந்து அதிக சத்தமாகவும் வித்தியாசமான ஒலியைக் கொண்டிருக்கும் என்றும், தங்கள் பகுதியில் வெள்ளம் எதிர்பார்க்கப்படுவதாக குடியிருப்பாளர்களை எச்சரிக்க அறிவிப்புகள் தொடர்ந்து வரும் என்றும் அவர் கூறினார்.
“இந்த சைரன்கள் நாடு முழுவதும் உள்ள முக்கியமான பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன, நாம் அவற்றின் ஒலியை அதிக சத்தமாகவும் , மிக துரிதமாக செயல்படவும் மேம்படுத்திவருகிறோம் ” என்று அவர் வியாழக்கிழமை (செப்டம்பர் 15) இங்கு அருகிலுள்ள பூலாவ் மெராண்டியில் உள்ள ஸ்மார்ட் தலைமையகத்தில்நடந்த பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் மற்றும் தொழில்நுட்ப முகவர்கள் இடையிலான ஓர் நிகழ்வின் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது கூறினார்.
சில இடங்களில் சோதனை நடவடிக்கையும் நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.
கடந்த திங்களன்று, பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப், பொதுமக்களுக்கு குழப்பத்தைத் தவிர்க்க, ஆம்புலன்ஸ்கள் மற்றும் போலீஸ் ரோந்து கார்கள் போன்ற மற்ற சைரன்களில் இருந்து வெள்ள எச்சரிக்கை சைரன்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று மத்திய பேரிடர் மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.