புத்ராஜெயா, செப்டம்பர் 23 :
நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் (GE15) ‘தான் எங்கு போட்டியிட வேண்டும் என்பதை பெர்சத்து கட்சி முடிவு செய்வது தொடர்பில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை ‘ என்று கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ரட்ஸி ஜிடின் கூறுகிறார்.
14வது பொதுத் தேர்தலில் கிளாந்தானின் கெத்ரே நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ரட்ஸி, தான் தனது கட்சியின் போக்கை கடைப்பிடிப்பதாகக் கூறினார்.
பெர்சத்து துணைத் தலைவராக இருக்கும் ராட்ஸி, தான் புத்ராஜெயாவில் போட்டியிடப் போவதாக வந்த வதந்திகளையும் நிராகரித்தார், இருப்பினும் அவர் இங்குள்ள சமூகத்துடன் நெருக்கமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
“எனது வீடு புத்ராஜெயாவில் உள்ளது, இங்குள்ளவர்கள் எனது அண்டை வீட்டார்கள்” என்று, இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 23) Wadah Aspirasi நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
2018 இல் அம்னோவின் டான் ஸ்ரீ அன்னுார் மூசாவிடம் கெத்ரேயில் தோல்வியடைந்த பின்னர், GE15 இல் புத்ராஜெயா தொகுதியில் ரட்ஸி கவனம் செலுத்துவதாக கடந்த மாதம் பேசப்பட்டது.
புத்ராஜெயா தொகுதியை தற்போது டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், அவர் 2004 முதல் நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.