ஷா ஆலாம், செப்.29 :
சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டால், அதற்கு பயன்படுத்த RM5 மில்லியனை சிலாங்கூர் அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தத் தொகையில், RM4 மில்லியன் மக்கள் வழங்கிய கோவிட்-19 நிதியில் இருந்தும், மீதமுள்ள RM1 மில்லியன் மாநில அரசின் ஒதுக்கீடு என்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கடந்த ஆண்டு வெள்ளம் காரணமாக நடந்த சோகம் மீண்டும் நிகழாமல் தடுக்க மாநில அரசு முழுமையாக தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இதைக் கருத்தில் கொண்டு, சிலாங்கூர் வெள்ளத்தை எதிர்கொள்ள 80 விழுக்காடு தயாராக இருப்பதாக அமிருடின் கூறினார்.
இன்று வியாழக்கிழமை (செப். 29) மாநிலச் செயலகத்தில் இரண்டு நாள் பயிற்சி மற்றும் பேரிடர் உருவகப்படுத்துதல் நிகழ்ச்சியைத் தொடங்கிய பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மந்திரி பெசார், கடந்த ஆண்டு வருந்தத்தக்க அத்தியாயத்திலிருந்து மாநிலம் நிறைய கற்றுக்கொண்டதாகவும், அதற்கேற்ப இம்முறை அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றார்.
“பருவமழை தொடங்குவதால் வெள்ளத்திற்கும் தயாராக இருக்குமாறு அனைத்து மத்திய மற்றும் மாநில நிறுவனங்களுக்கும் மாநில அரசு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
“முந்தைய வெள்ளம் சம்பவத்தில் நடந்தது போன்று இல்லாது இம்முறை உயிர் இழப்புகளைத் தடுக்க விரும்புகிறோம்,” என்று அமிருடின் கூறினார்.
கடந்த ஆண்டு வெள்ளத்தில், சிலாங்கூரில் 25 பேர் உயிரிழந்தனர் மற்றும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன என்பது நினைவுகூரத்தக்கது.