சீனாவில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவத்தொடங்கி, உலகில் இன்றளவும் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், இந்த தொற்றினால் ஏற்படுகிற உயிர்ப்பலி எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. இருந்தபோதிலும், இந்த தொற்று நோய் இன்னும் சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாகவே நீடிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது.
இது அதன் மிக உயர்ந்த எச்சரிக்கை நிலை ஆகும். இதுபற்றி உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச சுகாதார ஒழுங்குமுறை அவசர குழு கூறும்போது, ” மற்ற சுவாச வைரஸ்களுடன் ஒப்பிடும்போது கொரோனா இறப்புகள் அதிகமாகவே உள்ளன” என தெரிவித்தது.
கொரோனா தொடர்பான சிக்கல்கள், கொரோனாவுக்கு பிந்தைய நிலைகள், அதன் தாக்கங்கள் எல்லாமே இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளப்படாமல் இருப்பதாகவும் அந்தக் குழு கூறியது.